யார் இங்கே குப்பையை கொட்டினது.. அதிகாரிகளா?.. கிடுக்கிப்பிடி போட்ட கலெக்டர் திவ்யா!
நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தூய்மை பணியில் ஈடுபட்டார்
ஊட்டி: யார் இங்கே குப்பையை கொட்டினது.. அதிகாரிகளா? என்று நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கேள்வி எழுப்பவும் அரண்டு போய்விட்டனர் உடன் இருந்தவர்கள்.
நீலகிரியை எடுத்து கொண்டால், பிளாஸ்டிக் என்றாலே மாவட்ட நிர்வாகம் கொதித்தெழுந்துவிடும். அதேபோல, சுற்றுலா பயணிகளையும் பிளாஸ்டிக் கொண்டு வர வேண்டாம் என்று சலிக்காமல் வேண்டுகோள் விடுத்து கொண்டே இருக்கும்.
மாவட்ட மக்களும் இதற்கு ஒத்துழைப்பு தந்தே வருகின்றனர். பிளாஸ்டிக் பொருள்களுக்கு எதிரான ஓர் அறப்போராட்டத்தை தொடங்கியவர் அன்று நீலகிரி கலெக்டராக இருந்த சுப்ரியா சாஹூதான். அடுத்தடுத்து வந்த கலெக்டர்களும் இதனை விடாமல் கடைபிடித்து வருகின்றனர்.
காங்கிரசை கழற்றிவிட்டு பாஜகவுடன் சேருகிறதா மஜத? குமாரசாமி, எடியூரப்பா என்ன சொல்றாங்க தெரியுமா?
உலிக்கல்
அது மட்டுமில்லை, குப்பையில்லா மாவட்டமாக மாற்றுவதற்காக மாவட்ட நிர்வாகம் ‘ஸ்வீப் புளுமவுண்டன்' என்ற பெயரில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பல இடங்களில் நடத்தி வருகிறது. குன்னூர் உலிக்கல் பேரூராட்சி சார்பில் சேலாஸ் பகுதியில் இந்த திட்டம் நேற்று துவங்கப்பட்டது.
குப்பையே இல்லை
இதற்காக மாவட்ட கலெக்டர் திவ்யா குன்னூருக்கு வருவதாக இருந்தது. ஆனால் நிகழ்ச்சி நடக்க உள்ள இடத்தில் குப்பையே இல்லை. இதை கண்ட அதிகாரிகள், கலெக்டர் வருவதற்கு முன் அங்குள்ள கடைகள் அருகே சேகரித்து வைக்கப்பட்டிருந்த குப்பைகளை அள்ளி கொண்டு வந்து சாலையில் கொட்டினர். இதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி ஆனார்கள். கொஞ்ச நேரத்தில் கலெக்டர் திவ்யா வந்துவிட்டார்.
யார் கொட்டியது?
சாலையில் குப்பைகள் குவிந்து கிடப்பதை கண்ட அவர், "அதிகாரிகள் சாலையில் குப்பைகளை போட்டார்களா" என்று கேள்வி எழுப்பினார். பொதுமக்கள் என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்து நின்றனர். பின்னர், கலெக்டர் திவ்யா துடைப்பத்தை எடுத்து வந்து சாலையில் கிடந்த குப்பைகளை சுத்தம் செய்ய ஆரம்பித்தார். இதை பார்த்த அந்த அதிகாரிகளும் துடைப்பத்தை கொண்டு வந்து பெருக்க ஆரம்பித்தனர்.
குப்பைகள்
இது நீலகிரியில் மட்டுமில்லை, நாட்டில் எந்த இடத்தில் தூய்மை பணி திட்டத்தை தலைவர்கள் துவங்குவதாக இருந்தாலும், சம்பந்தப்பட்ட இடத்தில், முன்னதாகவே குப்பையை கொட்டி வைத்து காத்துகிடப்பதே பெரும்பாலான அதிகாரிகளுக்கு வேலையாக உள்ளது. ஆனால் குப்பையே இல்லாத இடத்தில், எப்படித்தான் தூய்மை பணியை ஆரம்பிப்பது என்ற கேள்வியும் எதார்த்தமாக எழவே செய்கிறது.