சூப்பர் திவ்யா.. கொரோனா போயே போச்சு.. மே 4 முதல் அரசு அலுவலகங்களும் திறப்பு.. கலக்கும் நீலகிரி!
பச்சை மண்டலத்தை நோக்கி நடைபோடுகிறது நீலகிரி மாவட்டம்
ஊட்டி: நீலகிரியில் தொற்று பாதிக்கப்பட்ட 9 பேருமே இப்போது குணமடைந்து வீட்டுக்கு கிளம்பி போய்விட்டார்கள்.. இதனால் பச்சை கலரை நோக்கி நீலகிரி சென்று கொண்டிருக்கிறது.. 20 நாட்களாக மலை மாவட்டத்தில் தொற்றே இல்லை என்ற புதிய பாதையில் நடைபோட்டு வருவது மக்களுக்கு புது தெம்பை தந்து வருகிறது. இந்நிலையில், தமிழக அரசின் உத்தரவுப்படி நீலகிரியில் மே 4 முதல் அரசு அலுவலகங்கள் வழக்கம்போல் செயல்படும் என கலெக்டர் அறிவித்துள்ளார்.
சென்ற மாதம் 8 பேர் டெல்லி மாநாட்டுக்கு சென்று ஊட்டிக்கு திரும்பியிருந்தனர்.. இதில் 4 பேருக்கு தொற்று ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட நிலையில், இவர்களுடன் தொடர்பில் இருந்த 30 பேரையும் உடனடியாக தனி வார்டில் அனுமதித்து டெஸ்ட் செய்யப்பட்டது.. அதில் சம்பந்தப்பட்ட 30 பேரில் 28 பேருக்கு தொற்று இல்லை என தகவல் வெளியானது.
இதனிடையே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் வசித்து வந்த ஊட்டி காந்தல், குன்னூர் ராஜாஜி நகர், கோத்தகிரி கடைவீதி, எஸ்.கைக்காட்டி போன்ற கண்காணிப்பில் உள்ளன.. இந்த பகுதியிலும் வருகிற 7-ந் தேதியுடன் தனிமைப்படுத்துதல் முடிவடைகிறது.
இப்போது நீலகிரி மாவட்டத்தில் கடந்த 20 நாட்களாக புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை... இதனால் நீலகிரி மாவட்டம் பச்சை மண்டலமாக அறிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.
இதற்கெல்லாம் முக்கிய காரணம் கலெக்டர் இன்னசென்ட் திவ்யாதான்.. போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிட்டு, தீவிர ஆய்வினை மேற்கொண்டார்.. கண்டிப்பு காட்டினார்.. அட்வைஸ் செய்து கொண்டே இருந்தார்.. ஒரு பக்கம் கேரளா, இன்னொரு பக்கம் கர்நாடகா எல்லையில் நீலகிரி உள்ளதாலும், குளிர் பிரதேசம் என்பதாலும், சுற்றுலாதலம் என்பதாலும் பலவித சிக்கல்களுக்கு மத்தியில்தான் இவர் அதிரடிகளை கையில் எடுத்தார்.
பொது முடக்கம் அமலுக்கு வருவதற்கு முன்பே நீலகிரி மாவட்ட எல்லைகள் இழுத்து மூடப்பட்டு கண்காணிக்கப்பட்டன!! அதனால்தான் 20 நாட்களாக தொற்றே இல்லாத மாவட்டமாக உள்ளது.. இப்போதைக்கு மக்கள் அவசர தேவைகளுக்காக இ-பாஸ் பெற்று வெளியிடங்களுக்கு சென்று திரும்பிய 1,000 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
அவர்களையும் சுகாதாரத்துறை ஊழியர்கள் தொடர்பு கொண்டு சளி, காய்ச்சல் உள்ளதா என்று தினமும் விசாரித்தும் வருகின்றனர்... இந்நிலையில், தமிழக அரசின் உத்தரவுப்படி நீலகிரியில் மே 4 முதல் அரசு அலுவலகங்கள் வழக்கம்போல் செயல்படும் என கலெக்டர் அறிவித்துள்ளார். விரைவில் கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டு நீலகிரி மாவட்டம் விரைவில் பச்சை மண்டலத்துக்கு மாற வாய்ப்பு உள்ளது மக்களிடையே மிகுந்த திருப்தியை தந்து வருகிறது!