விமானப் படை ஹெலிகாப்டர் விபத்து: பிரதமரிடம் விளக்கிய ராஜ்நாத்சிங்.. குன்னூர் வர திட்டம்?
நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் விமான படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது குறித்து மத்திய அமைச்சரவையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விவரித்துள்ளார். அவர் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Recommended Video
இந்திய விமான படைக்கு சொந்தமான எம்ஐ 17 வி 5 என்ற ஹெலிகாப்டரில் கோவை மாவட்டம் சூலூரிலிருந்து நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வெலிங்டனுக்கு ராணுவ உயரதிகாரிகள் புறப்பட்டனர்.
இவர்கள் வெலிங்கடனை அடைய 10 கிலோமீட்டர் தூரம் இருந்த நிலையில் காட்டேரி என்ற அடர்ந்த காட்டு பகுதி அருகே ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பலி எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது.
பனி மூட்டம் காரணமாக இந்த விபத்து நடந்ததாக சொல்லப்படுகிறது. இந்த விமானத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவியும் பயணம் செய்துள்ளனர். அவர்களின் நிலை என்ன என தெரியவில்லை.
ஊட்டி மற்றும் கோவையிலிருந்து மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். இந்த ஹெலிகாப்டர் விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விவரித்துள்ளார். அவர் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.