குளுகுளு ஊட்டியில்... அனல் பறந்த திமுக ஆய்வுக் கூட்டம்... வாடிய முபாரக் முகம்... தேற்றிய கே.என்.நேரு
நீலகிரி: குளு குளு ஊட்டியில் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு நடத்திய ஆய்வுக்கூட்டத்தில் 100 டிகிரியை கடந்து அனல் பறந்துள்ளது.
திமுக மாவட்டச் செயலாளர் முபாரக்கிற்கு எதிராக நிர்வாகிகள் கொந்தளிப்பதை பார்த்து கே.என்.நேருவுக்கு வியர்த்துக் கொட்டியுள்ளது. அந்தளவிற்கு அங்கு நிலவரம் இறுக்கமாக இருந்துள்ளது.
விரைவில் தலைமை நல்ல முடிவை எடுக்கும் என்ற உத்திரவாதத்தை அளித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுள்ளார் கே.என்.நேரு.
தமிழகத்தில் அனைத்து அரசு வேலைகளும் தமிழர்களுக்கே.. சட்டம் போடுங்க.. ராமதாஸ் அதிரடி
பஞ்சாயத்து
திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மாவட்ட வாரியாக ஆய்வுக்கூட்டம் நடத்தி நிர்வாகிகளின் நிறை குறைகளை கேட்டறிந்து வருகிறார். அந்த வகையில் நேற்று நீலகிரி மாவட்டத்திற்கு சென்ற நேரு, திமுக நிர்வாகிகளுடன் ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். அதில் மாவட்டச் செயலாளர் முபாரக் மீதும் மாவட்ட துணைச் செயலாளர் ரவிக்குமார் மீதும் குற்றச்சாட்டுகள் குவிந்துள்ளன.
குற்றச்சாட்டு
மாவட்டச் செயலாளர் முபாரக் பணத்திலேயே குறியாக இருப்பதாகவும் மாவட்ட துணைச் செயலாளர் ரவிக்குமார் கிழித்த கோட்டை தாண்டாமல் அவர் செயல்படுவதாகவும் புகார் கூறியிருக்கின்றனர். மேலும், மாவட்ட துணைச் செயலாளராக உள்ள ரவிக்குமார் அதிமுகவுடன் மறைமுக கூட்டணி அமைத்து மார்க்கெட்டில் கடைகள் நடத்தி வருவது உள்ளிட்ட விவகாரங்களை நேருவிடம் தெரிவித்திருக்கின்றனர்.
அழைத்து வந்த நேரு
ஒரு கட்டத்தில் திமுக பொதுக்குழு உறுப்பினர் மாங்கோடு க.ராஜா என்பவர் முபாரக் பற்றி மிக ஆவேசமான முறையில் குற்றஞ்சாட்டியிருக்கிறார். இதனை சற்றும் எதிர்பார்க்காத முபாரக் அந்த நிமிடத்திலேயே அங்கிருந்து கோபத்தில் வெளியேற முற்பட்டுள்ளார். அவரை அழைத்து சமாதானம் செய்த நேரு, எங்கு தான் பிரச்சனைகள் இல்லாமல் இல்லை, பொறுமையாக இருங்க பார்த்துக்கலாம் எனப் பேசியிருக்கிறார்.
தலைமை முடிவெடுக்கும்
ஒரு காலத்தில் முபாரக்குடன் இணைந்து அரசியல் செய்த முஸ்தபா, எக்ஸ்போ செந்தில், பாண்டியராஜன் ஆகியோர் அவரது நடவடிக்கைகள் பிடிக்காமல் வெளியேறிவிட்ட கதையையும் நிர்வாகிகள் நேருவிடம் கூறியுள்ளனர். எல்லாவற்றையும் புகார் மனுவாக கொடுங்க என வாங்கிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு திருப்பூர் ஆய்வுக்கூட்டத்திற்கு சென்றுவிட்டார் நேரு. விரைவில் இது பற்றி தலைமை முடிவெடுக்கும் என்ற உறுதியையும் நேரு அளித்திருக்கிறார்.