ஆடம்பரம் வேண்டாம்! அரசு மாளிகையே போதும்! ஊட்டி பயணத்தில் முதல்வர் ஸ்டாலின் காட்டிய எளிமை!
நீலகிரி: இரண்டு நாள் பயணமாக நீலகிரி மாவட்டத்துக்கு சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் தனக்கு செய்யப்பட்டிருந்த ஆடம்பர வரவேற்பு ஏற்பாடுகளை முற்றிலும் தவிர்த்துள்ளார்.
ஊட்டிக்கு எப்போது சென்றாலும் தாம் தங்கக்கூடிய ஜெம்பார்க் நட்சத்திர விடுதியை இந்த முறை தவிர்த்து அரசு மாளிகையான தமிழகத்தில் அவர் தங்குகிறார்.
கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது இப்படித்தான் ஆடம்பர நட்சத்திர விடுதிகளை தவிர்த்து அரசு மாளிகையில் தங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
முதல் நாள் துர்கா ஸ்டாலின், அடுத்து சசிகலா.. “ஒரே கோவிலில் அடுத்தடுத்து தரிசனம்” வேண்டுதல் என்னவாம்?
நீலகிரி பயணம்
முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு இரண்டாவது முறையாக நீலகிரி மாவட்டத்துக்கு பயணம் சென்றுள்ளார் ஸ்டாலின். கோவையில் இருந்து இன்று பிற்பகல் கார் மூலம் சாலை
மார்க்கமாகவே பயணித்து இரவு 7 மணியளவில் அவர் ஊட்டி சென்றடைந்தார். முன்னதாக அவருக்கு வழி நெடுகிலும் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மாவட்ட எல்லையில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், நீலகிரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் ஆ.ராசா ஆகியோர் முதல்வர் ஸ்டாலினுக்கு வரவேற்பு அளித்தனர்.
ஆடம்பரம் வேண்டாம்
முதலமைச்சர் ஸ்டாலின் ஊட்டியில் எங்கு தங்குகிறார் என்ற விவரம் கடைசி வரை குழப்பமாகவே இருந்தது. காரணம் அரசு மாளிகையான தமிழகத்தில் தங்குவாரா அல்லது
அவர் எப்போதும் தங்கும் ஜெம் பார்க் எனப்படும் தனியார் நட்சத்திர விடுதியில் தங்குவாரா என்பது அதிகாரிகள் மத்தியிலேயே குழப்பமாக இருந்தது.
இதனால் தமிழகம் மாளிகை மற்றும் ஜெம் பார்க் நட்சத்திர விடுதி என இரண்டு இடங்களிலும் முதல்வருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
முதல்வர் சாய்ஸ்
கடைசியில் தனியார் நட்சத்திர விடுதிக்கு நோ சொன்ன முதல்வர் ஸ்டாலின், அரசு பங்களாவான தமிழகம் மாளிகையையே தங்குவதற்கு தேர்வு செய்தார். அரசு விருந்தினர் மாளிகையை பொறுத்தவரை சுற்றுலாத்துறை மற்றும் பொதுப்பணித்துறையின் கீழ் பராமரிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகிறது. 40
ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்த விசாலாமான அமைப்பை கொண்டது இந்த தமிழகம் மாளிகை என்பது குறிப்பிடத்தக்கது.
மலர் கண்காட்சி
வெள்ளிக்கிழமை காலை ஊட்டியில் மலர் கண்காட்சியை தொடங்கி வைக்கும் முதல்வர்
ஸ்டாலின் சனிக்கிழமை அன்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில்
கலந்துகொள்கிறார். முதல்வர் ஸ்டாலினின் ஊட்டி வருகையையொட்டி அங்குபாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.