தி.க. பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி கார் விபத்தில் மரணம்
திக பொருளாளர் பிறைநுதல் செல்வி சாலை விபத்தில் பலியானார்.
குன்னூர்: திராவிடர் கழக பொருளாளர் பிறைநுதல் செல்வி சாலை விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 72.
2013 முதல் திக-வின் முக்கிய பொறுப்புகளை வகித்தவர் பிறைநுதல் செல்வி ஆவார். குன்னூரில் வசித்து வந்தார். திருப்பூரில் நடைபெற்ற திக தலைவர் வீரமணியின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டுவிட்டு, திரும்பவும் குன்னூருக்கு காரில் வந்து கொண்டிருந்தார்.
காட்டேரி என்ற இடத்தில் அவரது கார் வந்தபோது, எதிரே வந்த கார் பலமாக நேருக்கு நேர் மோதி பயங்கரமான விபத்து ஏற்பட்டது.
கார் விபத்து
இந்த விபத்தில் பிறைநுதல் செல்வி அணிந்திருந்த கார் சீட் பெல்ட்டின் கொக்கி அவரது வயிற்றில் குத்தி பலமான காயம் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக குன்னூர் தனியார் ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், அவர் உயிரிழந்தார்.
மாநில பொருளாளர்
நீலகிரி மக்களால் பெரிதும் மதிக்கப்பட்டு வந்தவர் பிறைநுதல் செல்வி. இவர் திராவிடர் கழகத்தின் மேல் அதீத பற்றுள்ளவர். திக பொருளாளராக முன்பு கோ.சாமிதுரைதான் பொருளாளராக இருந்தார். அவர் மறைவுக்கு பிறகு திக பொருளாளராக பிறைநுதல் செல்வி தேர்ந்தெடுக்கப்பட்டார். 2013-ல் சென்னையில் நடைபெற்ற திக செயற்குழு கூட்டத்தில் அக்கட்சி வீரமணி முன்னிலையில் பொருளாளராக அறிவிக்கப்பட்டார்.
விருப்ப ஓய்வு
இவர் ஒரு டாக்டர். பி.எஸ்.ஸி, எம்.பி.பி.எஸ், டி.ஜி.ஓ. பட்டம் பெற்றவர். 22 ஆண்டு காலம் குன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் மகப்பேறு மருத்துவராகவும், கோத்தகிரி தலைமை ஆஸ்பத்திரியில் தலைமை டாக்டராகவும், மருத்துவத்துறையில் துணை இயக்குநராகவும் பதவி வகித்தவர். அரசு பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று திராவிடர் கழக கள பணிக்காக தன்னை முழுவதுமாகவே அர்பணித்துக் கொண்டார். திராவிடர் கழக பொதுச் செயலாளராகவும் பணியாற்றியவர் இவர்.
மருத்துவர்
சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட இவரது கணவர் கவுதமனும் ஒரு டாக்டர்தான். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர்களும் பெற்றோரை போன்றே சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்கள்தான்.
நல்லடக்கம்
நீலகிரி மாவட்ட மக்கள் பிறைநுதல் செல்வி மறைவால் துயரத்தில் உள்ளனர். அவரது உடல் இன்று மாலை 4 மணிக்கு குன்னூரிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது