6 நாளாச்சு.. சாப்பிடல.. தண்ணி கூட குடிக்கல.. குட்டியின் சடலத்தருகே காத்து கிடக்கும் தாய் யானை!
குட்டியானை சடலத்தை தாய் யானை 6வது நாளாக பாதுகாத்து நிற்கிறது
நீலகிரி: 6 நாளாச்சு.. சாப்பிடவும் இல்லை.. தண்ணி கூட குடிக்கல.. இறந்துபோன தன் குட்டியின் சடலத்தின் பக்கத்திலேயே ஒரே இடத்தில் 6 நாளாக நின்று கொண்டிருக்கிறது தாய் யானை.. இந்த 6 நாளாக அழுதபடியே இருக்கிறது.. யாரும் அருகில் செல்ல முடியாமலும், இறந்த சடலத்தை மீட்க கூட முடியாமலும் வனத்துறையினர் தவித்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து விடுகின்றன.. விவசாய நிலங்களை அழிப்பதுடன், ஊருக்குள் இருக்கும் கால்நடைகளையும் அடித்து கொன்று வருகின்றன.
குறிப்பாக காட்டு யானைகள் உணவு தேடி நிலங்களுக்குள் புகுந்துவிடுகின்றன.. இப்படித்தான் கூடலூர் அருகே கொச்சுக்குன்னு என்ற பகுதி உள்ளது... இந்த இடத்தில் கடந்த வாரம் திடீரென யானைகள் பிளிறும் சத்தம் கேட்டது.
தேயிலை தோட்டம்
விடிகாலை நேரத்திலேயே யானைகள் பிளிறியதால் மக்கள் நடுங்கிவிட்டனர். அதனால் அங்கிருக்கும் தோட்ட தொழிலாளர்கள் ஓடிவந்தனர்... அப்போது ஒரு தேயிலை தோட்டத்துக்கும், காட்டுப்பகுதிக்கும் நடுவில் ஒரு சதுப்பு நிலத்தில் உள்ள புதரில் 3 யானைகள் நின்றிருந்தன... அதில் ஒரு யானை மட்டும் அழுதுகொண்டே இருந்தது.
குட்டி யானை
அதனால் மக்கள் அந்த புதரில் என்ன இருக்கிறது என்று எட்டி பார்த்தபோது, புதரின் சேற்றில் சிக்கி புதைந்த போன நிலையில் குட்டி யானை ஒன்று இறந்து கிடந்தது. அப்போதுதான் அருகில் நின்று அழுது கொண்டிருப்பது தாய் யானை என்று தெரியவந்தது. திடீரென பொதுமக்கள் திரண்டு வந்துவிட்டதால், யானைகள் மிரண்டுவிட்டன.. அதனால் அவர்களை திடீரென துரத்தியது.
பட்டாசுகள்
தகவலறிந்து கூடலூர் வனத்துறையினர் வந்துவிட்டனர்... அப்போது வனத்துறையினரின் ஜீப்பையும் தாய் காட்டு யானை ஆக்ரோஷமாக துரத்தியது... இதனால் வனத்துறையினரால் குட்டி யானையின் சடலத்தை அப்புறப்படுத்த முடியவில்லை. உடனே பட்டாசுகளை கொளுத்தி போட்டனர்.. ஆனாலும் தாய் யானை அசரவில்லை.. விடிய விடிய குட்டியானையின் சடலம் பக்கத்திலேயே நிற்கவும் மறுநாள் சென்று பார்த்தனர். அப்போதும் யானை அதே ஆவேசத்துடன் அழுதபடியே இருந்தது.
ஆக்ரோஷம்
இந்நிலையில், அன்றைய இரவே குட்டி யானையின் உடலை செந்நாய்கள் கூட்டம் கடித்து தின்றிருந்தது.. குதறிய நிலையில் அந்த சடலம் இருந்தாலும் தாய் யானை அங்கிருந்து நகரவே இல்லை. இன்று 6 நாளாகிறது.. வனத்துறையினரால் எதுவுமே செய்ய முடியவில்லை. பட்டாசுகளை கொளுத்தி போட்டால், ஏற்கனவே ஆக்ரோஷத்தில் உள்ள யானை இன்னும் ஆவேசமாகும் என்பதால் அந்த முயற்சியை கையில் எடுக்கவில்லை..
சாப்பிடவில்லை
இறந்துபோன யானையின் உடம்பில் இருந்து துர்நாற்றம் வந்தால்தான் தாய் யானை திரும்பி செல்லுமாம்.. அதன்பிறகுதான் சடலத்தை மீட்க முடியும் என்பதால், பொதுமக்கள் யாரையும் தாய் யானை பக்கம் போக வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். ஆனால் இறந்து 6 நாள் ஆன நிலையிலும் தாய் யானை நகரவே இல்லை.. ஒரே இடத்தில் நிற்கிறது.. சாப்பிடவில்லை.. தண்ணிகூட குடிக்கவில்லை.. அழுதபடியே நிற்கிறது.
தர்பூசணி பழங்கள்
அதே சமயம் யாராவது பக்கத்தில் வந்து குட்டியை தூக்கி கொண்டு போய்விடுவார்களோ என்று பயந்து, சுற்றுமுற்றும் பார்த்தபடியே உள்ளது.. தாய் யானையின் இந்த பாசப் போராட்டம் அந்த பகுதி மக்களை நிலைகுலைய வைத்து வருகிறது. இந்த யானை எதுவுமே 6 நாளாக சாப்பிடாமல் உள்ளது அவர்களை கவலை கொள்ள செய்துள்ளது. அதனால் தர்பூசணி போன்ற பழங்களை கொஞ்சம் பக்கத்தில் சென்று வைத்துவிட்டு வருகிறார்கள்.. ஆனாலும் யானை சாப்பிடவில்லை.
தாய்ப்பாசம்
இந்த யானையுடன் வந்த மற்ற யானைகள் காட்டுக்கே திரும்பி போய்விட்டனவாம்... ஆனால் இந்த யானை மட்டும் ஒரே இடத்தில் நின்று கொண்டு இருக்கிறது.. பார்க்கவே படு சோர்வாகவும் காணப்படுகிறது.. ஆனால், தாரை தாரையாய் கண்ணில் நீர் வழிய விடிய விடிய நின்று கொண்டிருக்கும் இந்த தாய் பாசம் நம்மை மிரள வைத்து வருகிறது!!