3 நாளாக ஒரே இடத்தில் நிற்கிறது.. இறந்த குட்டியின் குதறிய உடல்.. மிரள வைக்கும் தாய் யானையின் பாசம்!
நீலகிரி: 3 நாளாக ஒரே இடத்தில் நின்று கொண்டிருக்கிறது தாய் யானை.. பக்கத்திலேயே குதறி கிடந்த நிலையில் அதன் குட்டி சடலமாக கிடக்கிறது.. தாய் யானை அழுதபடியே உள்ளதாலும், ஆக்ரோஷம் மிகுந்து காணப்படுவதாலும் யாரும் அந்த யானை பக்கத்தில் போக வேண்டாம் என்று வனத்துறையினர் பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளனர். அதே சமயம், குதறிய நிலையில் கிடக்கும் அந்த சடலத்தையும் எடுக்க முடியாமல் வனத்துறையினர் 3வது நாளாக தவித்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து விடுகின்றன.. விவசாய நிலங்களை அழிப்பதுடன், ஊருக்குள் இருக்கும் கால்நடைகளையும் அடித்து கொன்று வருகின்றன.
குறிப்பாக காட்டு யானைகள் உணவு தேடி நிலங்களுக்குள் புகுந்துவிடுகின்றன.. இப்படித்தான் கூடலூர் அருகே கொச்சுக்குன்னு என்ற பகுதி உள்ளது... இந்த இடத்தில் 2 நாளைக்கு முன்பு திடீரென யானைகள் பிளிறும் சத்தம் கேட்டது.
விடிகாலை நேரத்திலேயே யானைகள் பிளிறியதால் மக்கள் நடுங்கிவிட்டனர். அதனால் அங்கிருக்கும் தோட்ட தொழிலாளர்கள் ஓடிவந்தனர்... அப்போது ஒரு தேயிலை தோட்டத்துக்கும், காட்டுப்பகுதிக்கும் நடுவில் ஒரு சதுப்பு நிலத்தில் 3 யானைகள் நின்றிருந்தன... அதில் ஒரு யானை அழுதுகொண்டே இருந்தது.. அங்கு ஒரு புதர் பக்கத்திலேயே அந்த யானை நின்றிருந்தது.
அதனால் மக்கள் அந்த புதரில் என்ன இருக்கிறது என்று எட்டிபார்த்தனர்... அந்த புதரின் சேற்றில் சிக்கி புதைந்து போன நிலையில் குட்டி யானை ஒன்று இறந்து கிடந்தது. அப்போதுதான் அருகில் நின்று அழுதுகொண்டிருந்தது, அதன் தாய் யானை என்று தெரியவந்தது. திடீரென பொதுமக்கள் திரண்டு வந்துவிட்டதால், யானைகள் மிரண்டுவிட்டன.. அதனால் அவர்களை திடீரென துரத்தியது.
தகவலறிந்து கூடலூர் வனத்துறையினர் வந்துவிட்டனர்... அப்போது வனத்துறையினரின் ஜீப்பையும் தாய் காட்டு யானை ஆக்ரோஷமாக துரத்தியது... இதனால் வனத்துறையினரால் குட்டி யானையின் சடலத்தை அப்புறப்படுத்த முடியவில்லை. உடனே பட்டாசுகளை கொளுத்தி போட்டனர்.. ஆனாலும் தாய் யானை அசரவில்லை.. விடிய விடிய குட்டியானையின் சடலம் பக்கத்திலேயே நின்றது.
மறுநாள் சென்றபோதும், அங்கேதான் நின்று கொண்டிருந்தது.. அதன் ஆவேசம் குறையவில்லை.. அழுதபடியே உள்ளது. ஆனால், அன்றைய இரவு குட்டி யானையின் உடலை செந்நாய்கள் கூட்டம் கடித்து தின்றிருந்தது..குதறிய நிலையில் அந்த சடலம் இருந்தாலும் தாய் யானை அங்கிருந்து நகரவே இல்லை. இன்று 3வது நாளாக வனத்துறையினரால் எதுவுமே செய்ய முடியவில்லை.
இப்போதுவரை காட்டு யானை கண்ணீருடன் அந்த குட்டி யானை பக்கத்திலேயே சடலத்தை பாதுகாத்து கொண்டிருக்கிறது... பட்டாசுகளை கொளுத்தி போட்டால், யானைகள் இன்னும் ஆக்ரோஷம் ஆகும், அதனால் பொதுமக்களுக்கும் இடைஞ்சல் வந்துவிடும் என்பதால், எந்த முயற்சியும் வனத்துறையினரால் எடுக்க முடியவில்லை. தாய் யானையே சாந்தமாகி.. திரும்பி சென்றால்தான் உண்டு என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இறந்துபோன யானையின் உடம்பில் இருந்து துர்நாற்றம் வந்தால்தான் தாய் யானை திரும்பி செல்லுமாம்.. அதன்பிறகுதான் சடலத்தை மீட்க முடியும் என்பதால், பொதுமக்கள் யாரையும் தாய் யானை பக்கம் போக வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். குட்டியை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. குட்டியின் சடலத்துடன் தாய் யானை அதே இடத்தில் நின்று பாசப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது சிலிர்க்க வைத்து வருகிறது.