பந்திப்பூர் பகுதியில் தொடர்ந்து பரவும் காட்டுத்தீ…. முதுமலை புலிகள் காப்பகத்துக்கு ஆபத்து
நீலகிரி:வனப்பகுதிகளில் எரியும் காட்டுத் தீ, முதுமலை புலிகள் காப்பகத்தின் முக்கியப் பகுதிகளில் பரவ வாய்ப்புள்ளதாக வனத் துறை அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் அடர்ந்த வனங்கள் சூழ்ந்த பகுதி ஆகும். தற்போது கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் ஏராளமான மரங்கள், செடி கொடிகள் காய்ந்து உள்ளன.
அதன் காரணமாக கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தீ, பலத்த காற்றால் மளமளவென நீலகிரியிலும் பரவியுள்ளது. ஏராளமான மரங்கள் சேதமடைந்ததோடு... விலங்குகளும் தீயில் கருகி பலியாகின.
காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் முதுமலை புலிகள் காப்பகத்தில் மரக்கிளைகளில் கூடுகட்டி வாழ்ந்து வந்த அரியவகை பறவை இனங்கள் தீயில் எரிந்து உடல்கருகி மடிந்தன. கொளுந்துவிட்டு எரியும் தீ, அதனால் உருவான வெப்பம் காரணமாக வனங்களில் பல நூறு ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள தேக்கு, ஈட்டி உள்ளிட்ட பல கோடி மதிப்பிலான விலை உயர்ந்த மரங்கள் எரிந்து நாசமாகியுள்ளன.
இதேபோன்று ஊர்வன மற்றும் சிறு விலங்குகளும் பாதிக்கப்பட்டன. பலத்த காற்று வீசுவதால் வனங்களில் இருந்து முதுமலை புலிகள் காப்பகத்தின் முக்கிய பகுதிகளில் தீ பரவும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து காட்டுத்தீ சமூக விரோதிகளால் ஏற்படுத்தியதா என்று வனத் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#Karnataka: Visuals from Bandipur forest area, where fire is under control now. pic.twitter.com/aa7ES4ulmw
— ANI (@ANI) February 27, 2019