நீலகிரியில் பயங்கரம்.. பல நாள் மிரட்டி வந்த காட்டெருமை.. முதியவரை குத்தி கிழித்து கொன்றது
நீலகிரியில் காட்டெருமை தாக்கி முதியவர் ஒருவர் பரிதாபமாக பலியானார்.
ஊட்டி: பல நாள் மிரட்டி மிரட்டி வந்த காட்டெருமை, இன்று ஒரு முதியவரை குத்தி கிழித்து கொன்றுவிட்ட சம்பவம் நீலகிரி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இதனால் சடலத்துடன் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டு வனத்துறையினருக்கு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
வனப்பகுதியிலுள்ள காட்டெருமைகள் உள்ளிட்ட விலங்குகள் உணவு, தண்ணீர் தேடி சில சமயம் ஊருக்குள் புகுந்துவிடும் அபாயம் உள்ளது. இதனால் கிராம மக்கள் எப்போதுமே பீதியில் இருக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
நீலகிரியில் தூதூர் மட்டம் என்ற பகுதி உள்ளது. இங்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு 2 காட்டெருமைகள் நுழைந்துவிட்டன. எவ்வளவோ முறை விரட்டியும் அந்த 2 காட்டெருமைகளும் அங்கிருந்து நகரவில்லை.
தொடர்ந்து அச்சுறுத்தி வந்ததால் வனத்துறையினரிடமும் இது பற்றி முறையிடப்பட்டது. உயிர்பலி ஏற்படுவதற்குள் எப்படியாவது 2 காட்டெருமைகளை மயக்க ஊசி போட்டு காட்டிற்குள் விரட்டிவிட வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால் இது சம்பந்தமான நடவடிக்கையில் தாமதம் ஏற்பட்டதாக தெரிகிறது.
இந்நிலையில், இன்று காலை 7 மணி அளவில் முதியவர் ஒருவரை காட்டெருமை தாக்கி விட்டது. இதில் உடலில் பலத்த காயமடைந்த அந்த முதியவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்தியே உயிரிழந்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
கிட்டத்தட்ட 11 மணி வரை முதியவரின் சடலத்துடனேயே இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து வனத்துறையினர் விரைந்து வந்து காட்டெருமைகளை பிடிப்பதாக உறுதி அளித்ததையடுத்து சடலம் கொண்டு செல்லப்பட்டது.