குன்னூர் சாலையில் உருண்டு விழுந்த ராட்சதப் பாறைகள்... அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு தவிர்ப்பு
நீலகிரி: குன்னூர் காட்டேரி சாலையில் உள்ள சேலாஷ் பகுதியில் கடும் மழை பெய்து வருவதால், ராட்சதப் பாறைகள் சரிந்து சாலையில் உருண்டு விழுந்துள்ளன.
குன்னூர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பாறைகளை சாலையில் இருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பாறைகள் சாலையில் உருண்டு விழுந்த நேரத்தில் அந்த வழியாக வாகனங்கள் ஏதும் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
பொளந்து கட்ட போகுது.. 22 மாவட்டங்களில் கன மழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை!
பலத்த மழை
நீலகிரி மாவட்டம் முழுவதும் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. மஞ்சூர், கட்டப்பெட்டு, கோத்தகிரி உள்ளிட்ட இடங்களில் இன்று காலை 11 மணியில் இருந்து மழை பெய்து வருகிறது.
விபத்து தவிர்ப்பு
இந்நிலையில் குன்னூர் அருகே காட்டேரி சாலையில் உள்ள சேலாஷ் என்ற இடத்தில் மாலை 5.30 மணிக்கு இரண்டு ராட்சதப் பாறைகள் உருண்டு விழுந்துள்ளன. ஆனால் பாறைகள் சாலையில் விழுந்த தருணத்தில் அந்த வழியாக வாகனங்கள் ஏதும் செல்லவில்லை. இதனால் அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
விரைந்த அதிகாரிகள்
பாறைகள் சாலையில் விழுந்த தகவல் குன்னூர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, நெடுஞ்சாலைத்துறை ஏ.டி. பாரிஜாதம் தலைமையில் அதிகாரிகள் குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது. இதையடுத்து பாறைகளை அகற்றி போக்குவரத்தை சீரமைக்கும் பணி முடுக்கிவிடப்பட்டது.
ஒரே நாளில் 2 இடத்தில்
இன்று ஒரே நாளில் மட்டும் நீலகிரி மாவட்டத்தில் 2 இடங்களில் பாறைகள் சரிந்து விழுந்திருப்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக காலையும் இதே போன்ற ஒரு நிகழ்வு குன்னூர் அருகே ஏற்பட்டுள்ளது. இப்போது மீண்டும் அதேபோல் பாறைகள் உருண்டு விழுந்துள்ளதால் இரவு நேர போக்குவரத்தை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.