கண்ணே தெரியல.. ஊரெல்லாம் ஒரே பனி.. ரோடெல்லாம் உருகுதே.. மருகுதே.. உறைய வைக்கும் குளிர்.. ஜில் ஊட்டி!
உறைபனியில் ஊட்டி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்
நீலகிரி : ஊட்டி முழுக்க பனிப்படர்ந்து காணப்படுகிறது.. குறைந்தபட்ச வெப்பநிலை 5 டிகிரிசெல்சியசாக இருப்பதுடன், ஊட்டியில் உறைபனி தாக்கத்தால் கடுங்குளிர் நிலவுகிறது... இதனால் எந்நேரமும் பொதுமக்கள் ஆங்காங்கே நெருப்பு மூட்டி குளிர் காய்ந்து வருகிறார்கள்.
தற்போது நீலகிரி மாவட்டத்தில் குளிர் சீசன் நிலவி வருகிறது.. வழக்கமாக நவம்பர் மாதத்திலேயே ஊட்டியில் உறைபனி தாக்கம் சூழ்ந்துவிடும்.. கடுங்குளிரும் நிலவி விடும்.. அந்த வகையில் கடந்த ஒரு மாதமாகவே குளிரில் ஊட்டி நடுங்கி கொண்டிருக்கிறது.
தற்போது குறைந்தபட்ச வெப்பநிலை 6 டிகிரிசெல்சியசாக இருக்கிறது.. கடந்த 4 நாட்களுக்கு முன்பு மைனஸ் 2, வரை சென்றது.. உறைபனி தாக்கம் தாங்க முடியாமல், பொதுமக்கள் ஆங்காங்கே நெருப்பு மூட்டி குளிர் காய்ந்து வருகிறார்கள்.
தோட்ட தொழிலாளர்களும், கூலி தொழிலாளர்களும் நெருப்பு மூட்டி குளிர் காய்ந்தும் வருகின்றனர்.. அதேபோல, இந்த 3 நாட்களாக ஊட்டியில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாகி உள்ளது.. விடுமுறை என்பதால், பெரும்பாலானோர் வாட்டும் குளிரையும் பொருட்படுத்தாது படையெடுத்து வருகின்றனர்.. ஆனால், அவர்களும், கம்பளி ஆடைகள், ஸ்வெட்டர், தொப்பிகளுடன்தான் இயற்கையை கண்டு ரசிக்கின்றனர்...
வழக்கமாக, ஊட்டி உறைபனிக்கு புல்வெளிகள் உட்பட தாவரங்கள் கருகிவிடும்.. சாம்பல் நிறத்தில் பூத்து காணப்படும்.. ஊட்டி தாவரவியல் பூங்காவில் புல்வெளிகள் அப்படி கருகிவிடாமல் இருக்க தினமும் காலை மற்றும் மாலையில் ஸ்பிரிங்ளர் மூலம் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது.. எனினும், உறைபனி தாக்கம் ஜனவரி முடியும்வரை இருக்கும் என்பதால், தேயிலை செடிகள் கருகும் அபாயம் ஏற்படும் என்று விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
மாலை நேரங்களில் வழக்கத்துக்கு மாறாக குளிர் அதிகமாக இருக்கிறது... இதனால் டீசலை எரிபொருளாக பயன்படுத்தும் லாரிகள், வண்டிகள் எதுவுமே காலை நேரங்களில் இயக்க முடிவது இல்லை... என்ஜின் மீது கொதிக்கும் சுடுதண்ணீரை ஊற்றிய பிறகுதான், இயக்கப்படுகிறது... அதேபோல காலை நேரங்களில் பனி அதிகமாக காணப்படுவதால், சாலையில் கண்ணே தெரிவதில்லை.. இதனால் அதுபோன்ற நேரங்களில் படுஜாக்கிரதையாகவே வண்டிகளை ஓட்டி வருகின்றனர்.