"ஆச்சரிய அவலாஞ்சி".. வரலாறு காணாத பெருமழை.. 100 ஆண்டு இல்லாத சாதனை!
அவலாஞ்சியில் இன்றும் கனமழை கொட்டி வருகிறது
Recommended Video
ஊட்டி: தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக, நாட்டு மக்களின் கவனத்தை அதிகமாகவே ஈர்த்து வருகிறது அவலாஞ்சி... அழகிய அவலாஞ்சி.. இப்போது ஆச்சரிய அவலாஞ்சியாக உருமாறி வருகிறது!
ஊட்டியில் இருந்து 25 கிலோ மீட்டரை தாண்டி உள்ளது அவலாஞ்சி என்னும் இடம். இங்கு குடியிருப்புகள் ஏதும் கிடையாது. இது வெறும் காடு தான்.
ஆனால் ஒவ்வொரு இடமும் மனதை வசியம் பண்ணக்கூடியவை.. அதனால்தான் ஊட்டிக்கு வருபவர்கள் அவலாஞ்சியை சுற்றி பார்க்காமல் செல்ல மாட்டார்கள்.
அவலாஞ்சி
இந்த அவலாஞ்சிதான் பவானி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியாகும். வழக்கமாக தென்மேற்கு பருவமழை காலங்களில் மழைப் பெய்யக் கூடிய இடம்தான் அவலாஞ்சி. அதனால் இந்த முறையும் இங்கு மழை எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான்.
பதிவு
ஆனால், இந்த வாரம் இங்கு பெய்த மழையின் அளவு அப்படி உணர்த்தவில்லை. நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருந்தது.. முந்தாநாள் வியாழக்கிழமை காலை 8 மணி முதல் வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்குட்பட்ட அதாவது இந்த ஒருநாளில் மட்டும், 91 செ.மீ மழை பதிவாகியுள்ளது. நேற்று பதிவானது இந்த அளவுதான், 100 ஆண்டுகளில் பதிவான அதிக மழையாகும் இது.
பாதிப்பு
தமிழ்நாட்டில் மட்டும் இல்லை.. தென்னிந்தியாவிலேயே இதுதான் அதிக மழைப்பதிவு. இதன்மூலம்தான் ஒரேநாளில் நாட்டு மக்களை திசை திருப்பி உள்ளது அவலாஞ்சி. அதிலும் வானிலை நிபுணர்கள் எல்லோருமே அவலாஞ்சியின் ஒவ்வொரு மாற்றத்தையும் மிக உன்னிப்பாகவே கவனித்து வருகிறார்கள். 100 ஆண்டுகால சரித்திரத்தை அவலாஞ்சி உடைத்துள்ளதால், அதன் பாதிப்பும் அதிகமாகவே உள்ளது.
சிக்கி கொண்டனர்
அவலாஞ்சி நீர் மின் நிலையம் அருகே 2 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் மின் வாரியத்தில் வேலை பார்த்து வந்த ஊழியர்கள் சிக்கிக் கொண்டார்கள். இவர்களால் நீண்ட நேரத்துக்கு வெளியே வரவே முடியவில்லை. பலர் வெளியேறிவிட்டாலும், 5 குடும்பங்களை சேர்ந்த 15 பேர் மட்டும் வெளியே வரமுடியாமல் போய்விட்டது.
மீட்பு படை
இவர்களை எப்படி காப்பாற்றுவது என்று தெரியாமல், கடைசியில் மின் வாரிய அதிகாரிகள் பாதிக்கப்பட்ட குடும்பங்களை மீட்க நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்துக்கு பரிந்துரை செய்தனர். இதன்பேரில், தமிழக அரசு நேற்று ஒரு ஹெலிகாப்டரை அவலாஞ்சிக்கு அனுப்பியது. அங்கு ஹெலிகாப்டரில் வந்த மீட்பு படையினர் மக்களை மீட்டு வெளியில் கொண்டு வந்தார்கள்.
ஆச்சரியம்
ஆனால் எந்த நேரமும் மக்களை மீட்க மாவட்ட நிர்வாகமும், பேரிடர் படையும் தயாராகவே உள்ளது மாவட்ட மக்களுக்கு ஆறுதலாக உள்ளது. எனினும், தமிழகத்தின் சிரபூஞ்சியாக மாறி கொண்டிருக்கும் அவலாஞ்சி.. இன்னும் என்னென்ன ஆச்சரியத்தை தர காத்துள்ளதோ தெரியவில்லை.