கொளுத்துகிற வெயிலுக்கு கொடைக்கானல் போகலாம் போல... கண்களுக்கு விருந்து.. மனதுக்கு மருந்து
கொடைக்கானல்: அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில், வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எதிர்பார்த்த அளவிற்கு மழை இல்லாததால், ரோட்டில் தோசை போடும் அளவிற்கு தரை சூடாக உள்ளது.
கோடை காலத்தை குதூகலமாக கொண்டாட கொடைக்கானலுக்கு போகலாம் என்ற மனநிலையை உருவாக்கி உள்ளது. அங்கு நிலவும் வானிலை. கடந்த இரண்டு நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. மேகங்கள் முத்தமிட்டு செல்கின்றன.
கண்களுக்கு விருந்து படைக்கும் விதமாக, பச்சை பசேல் என காட்சியளிக்கின்றன. கொட்டும் அருவிகளும், பறவைகளின் சத்தங்களும் மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. சாலையோரம், மலர்ந்துள்ள பூக்கள், வரவேற்பது போன்ற உணர்வை அள்ளிக் கொடுக்கிறது.
மோடியை கொல்ல ரூ.50 கோடி பேரம்.. பிஎஸ்எப் மாஜி வீரருக்கு எதிராக பாஜக வெளியிட்ட பரபரப்பு வீடியோ
தண்ணீர் தட்டுப்பாடு
கொடைக்கானலில் கடந்த பிப்ரவரி மாதம் தொடக்கத்திலேயே கோடையின் தாக்கம் அதிகமாக நிலவி வந்தது. நாட்கள் செல்ல செல்ல வெப்பம் அதிகரித்ததால் கோடையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் நிலவி வந்தது. மலைகளின் இளவரசிக்கே வறட்சி என்றால், மக்களின் தவிப்பை சொல்லி தெரிய வேண்டியதில்லை.
கொட்டுகிறது மழை
ஆனால், கடந்த சில நாட்களாக விட்டு, விட்டு பெய்து வரும் மழையால் கொடைக்கானல் நகருக்கு குடிநீர் வழங்கும் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கோடையில் ஏற்பட இருந்த தண்ணீர் தட்டுப்பாட்டுக்கான ஆபத்தும் நீங்கியுள்ளது.
அருவிகளில் வெள்ளம்
வெள்ளி நீர் வீழ்ச்சி, பியர் சோழா, பாம்பார் நீர் வீழ்ச்சி போன்ற பல்வேறு அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. மேலும் மலைச்சரிவில் ஆங்காங்கே புதிய அருவிகளும் தோன்றி வருகின்றன. இதனால் கொடைக்கானல் நகர மக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கேரட், உருளைக்கிழங்கு
கொடைக்கானல் மேல்மலை கிராமமான பூம்பாறை, பூண்டி, மன்னவனூர், கீழானவயல் உள்ளிட்ட பல கிராமங்களில் கடந்த 3 நாட்களாக நல்ல மழை பெய்துள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் கேரட், உருளைக்கிழங்கு விதைப்பு அதிகரித்துள்ளது . கீழ்மலை பகுதிகளிலும் நேற்று நல்ல மழை பெய்தது.
மழையில் நனைந்தப்படி
சுற்றுலா பயணிகள் மழையில் நனைந்தப்படி சுற்றுலா பகுதிகளை பார்வையிட்டு மகிழ்ந்தனர். கொடைக்கானல் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்ததால் தற்போது அங்கு குளிர் நிலவுகிறது. இயற்கையின் கொடையை, கொண்டாடுவதற்கு கொடைக்கானல் தற்போதைக்கு செம சாய்ஸ் என்கின்றனர். அங்கு சென்று வந்தவர்கள்.