கொட்டித்தீர்த்த கனமழையால் நீலகிரி நிலைகுலைந்து போனது - மீண்டும் ரெட் அலெர்ட்
கனமழை கொட்டித்தீர்த்ததால் நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகள் நிலைகுலைந்து போயுள்ளது. கனமழை நீடிப்பதால் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இரண்டாவது நாளாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அவதியடைந்துள்ளனர்
நீலகிரி: காணும் இடமெடுங்கும் வெள்ளப்பெருக்கு... முறிந்து விழுந்த மரங்கள், சாய்ந்து விழுந்த மின் கம்பங்கள், சரிந்து விழுந்த மலை சிதைந்து போயுள்ளது நீலகிரி. இந்த மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை தனது கோர முகத்தை பதிவு செய்துள்ளது. தினசரியும் சராசரியாக 40 செமீக்கும் அதிகமான அளவிற்கு மழை பதிவாகி வருவதால் மக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
தென்மேற்கு பருவமழை கடந்த 1ஆம் தேதி முதலே நீலகிரி மாவட்டத்தின் கூடலூர், அவலாஞ்சி உள்ளிட்ட பல பகுதிகளில் விடாது பெய்து வருகிறது. இதனால் மக்கள் வீடுகளில் முடங்கினர். கடந்த 5 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.
நீலகிரி மலைப்பாதையில் 200க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்துள்ளன மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. பெரும்பாலான பகுதிகளில் மின்சாரமும், தொலை தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளன.
எங்கே இங்க இருந்த நிலத்தை காணோம்.. கேக்கை வெட்டி எடுப்பதை போல மாயம்.. நீலகிரி நிலச்சரிவு ஷாக் காட்சி
காணும் இடமெங்கும் வெள்ளம்
கூடலூர் மற்றும் பந்தலூர் சுற்றுவட்டாரப் பகுதியிலுள்ள ஓவேலி ஆறு, முதுமலை புலிகள் காப்பகத்தின் மையப் பகுதியில் ஓடும் மாயாறு, பாண்டியாறு, புன்னம்புழா உட்பட அனைத்து ஆறுகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மீட்புப்பணி
தேன்வயல் மற்றும் இருவயல் பழங்குடியினர் கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்ததால், அங்கு வசிக்கும் 20 குடும்பங்கள் கயிறு மூலம் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தெங்குமரகடா கிராமம் தனித்தீவாக காட்சி அளிக்கிறது.
நிரம்பி வழியும் அணைகள்
அப்பர் பவானி, அவலாஞ்சி, எமரால்டு, குந்தா, பைகாரா உட்பட பெரும் பாலான அணைகளில், நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது. மஞ்சூர் அருகே, குந்தா அணையில் மொத்த கொள்ளளவான 89 அடியில் 86.5 அடி வரை நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
ரெட் அலெர்ட்
இதனிடையே நீலகிரி மாவட்டத்தில் அதி தீவிர கனமழை பெய்யக்கூடும் என எச்சரித்து சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். ஏற்கனவே, கடும் வெள்ளம், மண் சரிவு, மின்சாரம், தொலை தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப்போயுள்ளது. மழை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.