பனி விழும் மலர்வனம்.. ஜொலிக்கிறாள் மலைகளின் அரசி.. நடுநடுங்குகிறது ஊட்டி
கடும் பனிப்பொழிவு காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி: காலங்காத்தால வெள்ளை வெளேர் என காட்சி தருகிறாள் மலை அரசி... ஊரெல்லாம் பனி விழும் மலர்வனம்தான்!!
எப்பவுமே டிசம்பர் வந்துவிட்டாலே குளிரும் ஆரம்பித்துவிடும். அதுவும் நீலகிரியில் கேட்கவே வேண்டாம். கொஞ்ச நாளாகவே பனிபொழிவு கொட்டி வருகிறது.
உதகை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தொடர்ந்து இந்த பனிப்பொழிவு நிலவுகின்றது. காலை 9 மணி வரை இந்த பனி மக்களை அச்சுறுத்தி கொண்டிருக்கிறது.
வெள்ளை போர்வை
முக்கியமாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உறை பனியின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. காலை நேரங்களில் கருப்பு நிற தார் சாலைகள் சாம்பல் நிறத்தில் தென்படுகிறது. அதேபோல, தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள புல்வெளிகள் எல்லாமே வெள்ளை போர்வையை விரித்து வைத்ததுபோல பனி உறைந்து கிடக்கிறது.
சாம்பல் நிறம்
புல்வெளிகளே இப்படி என்றால், பூக்களும், காய்கறிகளும், சொல்லவே தேவையில்லை. பனியால் எல்லாமே பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்கள் முதல் வீடுகளின் மேல்பரப்புகள் வரை என எல்லாமே பனி படர்ந்து சாம்பல் நிறத்தில் காணப்படுகிறது.
கருகும் இலைகள்
குளிர் 5 டிகிரி, 3 டிகிரி என குறைந்து இப்போது 0 டிகிரி அதாவது மைனசில் போய்க் கொண்டிருக்கிறது. இதனால் மாவட்ட மக்கள் ரொம்பவும் அவதிப்பட்டு வருகின்றனர். காலையில் 8 மணி வரை ரோட்டில் ஆள் நடமாட்டமே குறைவாகத்தான் உள்ளது. அது மட்டும் இல்லை... இந்த பனிபொழிவால், தேயிலை, கேரட், உள்ளிட்ட பயிர்களின் இலைகளும் கருகி கொண்டு வருகிறது.
ஜனவரி வரை நடுக்கம்
இந்த குளிரில் புத்தாண்டை கூட மக்கள் குஷியாக கொண்டாடவும் முடியவில்லை. சுற்றுலா பயணிகளின் வருகையும் இந்த வருடம் குறைந்துதான் காணப்பட்டது. இனிவரும் நாட்களிலும் உறைப்பனியின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று தெரிகிறது. இதனால் ஜனவரி மாசம் முடியும் வரை மக்களுக்கு நீலகிரி மக்களுக்கு நடுக்கம்தான்!