அவலாஞ்சியில் அந்தரத்தில் தொங்கும் வீடுகள்.. அச்சத்தில் மக்கள்.. தீவிரமடையும் மீட்பு பணிகள்
நீலகிரியில் கடுமையான மண் சரிவு ஏற்பட்டுள்ளது
Recommended Video
ஊட்டி: நீலகிரி அருகே வீடுகள் எல்லாம் அந்தரத்தில் தொங்கி கொண்டிருக்கின்றன. அந்த அளவுக்கு இங்கு மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மீட்பு பணிகளும், பாதுகாப்பு பணிகளும் துரிதமாக இங்கு நடந்து வருகின்றன.
நீலகிரியில் கடந்த 7-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை பேய் மழை பெய்தது. 3 மாதம் பெய்ய வேண்டிய மழை இந்த 3 நாட்களில் பெய்தது. இது 100 ஆண்டு வரலாற்றில் இல்லாத மழைபதிவாக பார்க்கப்பட்டது.
அவலாஞ்சி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இந்த மழை பொழிவு அதிகமாக பதிவானது. 82, 91, 45 செ.மீ. மழை, என 3 நாட்கள் மழை பதிவானதுடன், வீடுகள் இடிந்தன.. மரங்கள் முறிந்து வீழ்ந்தன.. மண்சரிவு ஏற்பட்டன.
இதனால் அவலாஞ்சியே தனியாக துண்டிக்கப்பட்டது. இந்த இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டாலும் அவர்கள் அனைவரும் மீட்பு படை மற்றும் ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்கப்பட்டனர். அவலாஞ்சியில் இப்படி ஒருபாதிப்பு ஏற்பட்டு விட்டதால், அதன் சுற்றுவட்டார பகுதிகளான எமரால்டு, லாரன்ஸ், அட்டுபாயில், தக்கர்பாபா நகர் பகுதிகளிலும் மண் சரிவு ஏற்பட்டது.
இதில் பெரிய அளவு மண் சரிவு தக்கர் பாபா நகர் பகுதியில்தான் ஏற்பட்டுள்ளது. இங்குள்ள வீடுகளின் முன் புற கதவு வரை மண் சரிந்து விழுந்து கிடக்கிறது. உயிருக்கு எந்த பாதிப்பும் இங்கு ஏற்படாவிட்டாலும், மண் சரிவு காரணமாக இங்குள்ள வீடுகள் அந்தரத்தில் தொங்கி கொண்டிருக்கின்றன. இதனால் பெரும்பாலானோர், அருகில் உள்ள பள்ளிகளில் தங்கவைக்கப்பட்டனர். மேலும் பலர் உறவினர் வீடுகளுக்கு சென்றுவிட்டனர்.
ஒருவேளை இங்கு மீண்டும் மழை பெய்துவிட்டால்தான் நிலைமை சிக்கல்தான். இப்போதைக்கு மழை இல்லை என்பதால் மீட்பு பணிகள் இங்கு துரிதமாக நடந்து வருவதால், குடியிருப்புவாசிகள் மீண்டும் தங்கள் வீடுகளுக்கே திரும்பி வருகின்றனர். எனினும் சில பகுதிகளில் அந்தரத்தில் வீடுகள் தொங்கி கொண்டிருப்பதால், அந்த பகுதிகளை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.