என்ன இது இப்படி கிளம்பிருச்சு.. எச்எம்முக்கு ஆதரவாக போராடிய பெற்றோர்களை விரட்டி கொட்டிய தேனீக்கள்!
குன்னூர்: பள்ளி ஹெச்.எம்.மை டிரான்ஸ்பர் செய்யக்கூடாது என்று முறையிட வந்த பெற்றோரை தேனீக்கள் விரட்டி விரட்டி கொட்டிய சம்பவம் குன்னூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சில நாள்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்து பள்ளிக் கல்வித்துறையும் உத்தரவிட்டிருந்தது.
இதனால் குன்னூரில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு இப்போது வேறு வேறு பள்ளிகளில் வேலை பார்த்து வருகின்றனர்.
மாணவர்கள் போராட்டம்
இந்நிலையில் குன்னூர் அருகே ஜெ.கொலகம்பை நடுநிலை பள்ளியில் தலைமையாசிரியர் சுமதி மற்றும் துணை தலைமை ஆசிரியர் தர்மராஜ் இருவரையும் டிரான்ஸ்பர் மாற்றப்பட்டதை கண்டித்து, மாணவ, மாணவிகள் ஸ்கூல் முன்பே போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் பெற்றோர்களும் சேர்ந்து போராடினர்.
பள்ளி வளாகம்
தொடர்ந்து அவர்களின் பணி மாறுதலை ரத்து செய்ய வேண்டும் என்று பெற்றோர் உள்ளிட்ட பொதுமக்கள் குன்னூர் மாவட்ட. கல்வி அதிகாரியிடம் மனு கொடுக்க சென்றனர். ஆனால் மனுவை பெற்று கொள்ள அதிகாரிகள் அங்கு யாருமே இல்லை. எனவே அதிகாரிகள் வரும்வரை அருகில் உள்ள குன்னூர் அறிஞர் அண்ணா பள்ளி வளாகத்தில் நின்று கொண்டு இருந்தனர்.
சிதறி ஓடினர்
அப்போது எதிர் பாராமல் எங்கோ இருந்து ஏராளமான தேனீக்கள் படையெடுத்து வந்தன. அங்கு இருந்தவர்கள் அனைவரையும் சரமாரியாக கொட்ட தொடங்கியது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் பொதுமக்கள் அங்கும் இங்கும் தலைதெறிக்க ஓடினர்.
போராட்டம் தொடரும்
இதில் 10-க்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயம் அடைந்தனர். உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அனைவரும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை நடந்து வருகிறது. டிரான்ஸ்வரை ரத்து செய்யாவிட்டாலும் எங்கள் போராட்டம் தொடரும் என்று ஆஸ்பத்திரியில் இருந்து காயமடைந்தவர்கள் தெரிவித்து வருகின்றனர்.