எதிர்கட்சி தலைவர் என்ற ஈகோ பார்க்காமல் முதல்வரை சந்திப்பேன்... ஊட்டியில் முக ஸ்டாலின்
ஊட்டி: எதிர்கட்சி தலைவர் என்ற ஈகோ பார்க்காமல் உங்களுக்காக முதல்வரை சந்தித்து நிவாரண பணிகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை வைப்பேன் என ஊட்டியில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் தென்மேற்கு பருவ மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கூடலுர், பந்தலூர் பகுதிகளில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஏராளமான மரங்கள் விழுந்ததால் மின்சாரம் பாதிக்கப்பட்டுளளது. சாலைகளும் உடைந்து பல இடங்களில் போக்குவரத்து துண்டிப்புக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தின் மழை சேத பாதிப்புகளை பார்வையிடுவதற்காக திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான முக ஸ்டாலின் நேற்று ஊட்டி சென்றார். நேற்று நடுவட்டம் இந்திராநகர் பகுதியில் மண்சரிவால் உயிரிழந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரது மனைவி அமுதாவின் குடும்பத்திற்கு ரூ.1லட்சம் நிதியுதவி வழங்கினார்.
நீலகிரியில் தொடர்ந்து பெய்யும் மழை.. துண்டிக்கப்பட்ட சாலைகள்.. தாமதமாகும் மீட்பு பணிகள்!
இதையடுத்து கூடலூர் அரசு பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமுக்கு சென்று பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறியதுடன் நிவாரண பொருட்களை வழங்கினார். பின்னர் மேங்கோ ரேஞ்ச் பகுதியில் நிலச்சரிவை பார்வையிட்டார். இதேபோல் சேரம்பாக்கம் திருமண மண்டபத்தில் இருந்த மக்களை சந்தித்தும் ஆறுதல் கூறினார்.
அங்கு செய்தியாளர்களிடம் பேசிய முக ஸ்டாலின் "கடந்த 5 நாள்களாக நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்ததன் காரணமாக மாவட்டம் முழுவதும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 2500 பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கப்படவிலலை. பாதிக்கப்பட்ட பகுதிகள் சீரமைக்கப்படவில்லை.
நீலகிரி மக்கள் பாதிக்கப்பட்ட தகவல் அறிந்து நான் உடனே மக்களை சந்தித்து நிவாரணம் வழங்க வேண்டும் எனமுடிவு செய்து சென்னையில் இருந்து புறப்பட்டேன். இந்த செய்தியை அறிந்த உடன் அவசர அவசரமாக ஆளும் அதிமுக ஒரு அமைச்சரை பெயரளவுக்கு அனுப்பி வைத்துள்ளது. அவரும் பெயரளவுக்கு சில முகாம்களை பார்வையிட்டு நிவாரணம் வழங்கி சென்றுள்ளார். எதிர்கட்சி தலைவர் என்ற இகோ பார்க்காமல் உங்களுக்காக முதல்வரை சந்தித்து நிவாரண பணி மேற்கொள்ளுமாறு கூறுவேன். அதையும் தாண்டி நிவாரண பணிகளை மேற்கொள்ளவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும்" என்றார்.