சர்ச்சை பேச்சுக்கு பின்னர்.. பலத்த பாதுகாப்புடன் திருப்பரங்குன்றம் சென்ற கமல்... மீண்டும் பிரச்சாரம்
கொடைக்கானல்: சர்ச்சை பேச்சுக்களால் இரண்டு நாள் அமைதியாக இருந்த கமல், தற்போது பிரச்சாரத்திற்காக கொடைக்கானலில் இருந்து புறப்பட்டு திருப்பரங்குன்றம் சென்றார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல் ஹாசன் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது முஸ்லீம்கள் அதிகம் இருக்கும் பகுதியில் பிரச்சாரம் செய்த கமல், " காந்தி சிலை முன்பு நின்று இதை கூறுகிறேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவன் பெயர் நாதுராம் கோட்சே. காந்தியின் கொள்ளுப் பேரனான நான், அந்த கொலைக்கு கேள்வி கேட்க வந்துள்ளேன்" என்றார்
கொல்கத்தாவில் பயங்கர மோதல்... பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா மீது வழக்குப்பதிவு
கமலுக்கு கண்டனம்
கமலின் இந்த பேச்சுக்கு பாஜக, அதிமுக , சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இதேபோல் இந்துத்துவா அமைப்பினர் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் சிலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் கமலின் பேச்சுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது..
அனுமதி இல்லை
இந்நிலையில் அரவக்குறிச்சி தொகுதிகளில் மேற்கொள்ளப்படவிருந்த தேர்தல் பிரச்சாரத்தை திடீரென கமல் ரத்து செய்தார். இதேபோல் ஒட்டப்பிடாரம் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் காந்தியை ஆதரித்து பிரச்சாரம் செய்விருந்தார் கமல். அந்த பிரச்சாரமும் திடீரென ரத்து செய்யப்பட்டது. பிரச்சாரத்திற்கு அனுமதி கிடைக்காததால் ரத்து செய்யப்பட்டதாக மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் தெரிவித்தனர்.
பலத்த பாதுகாப்பு
இதையடுத்து கமல் கடந்த இரண்டு நாட்களாக பிரச்சாரத்தில் ஈடுபடாமல் கொடைக்கானலில் அமைதியாக இருந்தார். இந்நிலையில் இன்று கொடைக்கானலில் இருந்து திருப்பரங்குன்றத்திற்கு காரில் புறப்பட்டு சென்றார். கமல் சாலை மார்க்கமாக சென்றதையொட்டி கொடைக்கானல்- வத்தலகுண்டு சாலையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
கமல் பிரச்சாரம்
இன்று திருப்பரங்குன்றம் - தோப்பூர், பெரியார் நகர், சமநாதம், பனையூர் உள்ளிட்ட இடங்களில் கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.. மேலும் நாளை அரவக்குறிச்சியில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் பங்கேற்க உள்ளார் என மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் தெரிவித்தனர்.