26 நாள் நிம்மதியா இருந்துச்சு.. ஊட்டியில் மீண்டும் கொரோனா.. 4 டிரைவர்களுக்கு உறுதி.. கவலையில் மக்கள்
ஊட்டியில் 4 லாரி டிரைவர்களுக்கு தொற்று உறுதியாகி உள்ளது
ஊட்டி: கிட்டதட்ட 26 நாட்களாக நிம்மதியாக இருந்த ஊட்டியில் திரும்பவும் தொற்று பரவி உள்ளது.. காய்கறி லோடுகளை கோயம்பேட்டில் இறக்கிவிட்டு ஊர் திரும்பிய 4 லாரி டிரைவர்களுக்கு வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது... இதனால் நீலகிரி மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
Recommended Video
ஊரடங்குக்கு முன்பேயே கடுமையான கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது நீலகிரி மாவட்டம்.. விழிப்புணர்வுகள், தீவிர கண்காணிப்புகள், சோதனைகள், அதிரடிகள், ஆய்வுகள் என மாவட்டமே பரபரப்பானது.. இதனால் மக்களும் அதற்கு கட்டுப்பட்டு வீடுகளில் முடங்கினர். பொது முடக்கம் அமலுக்கு வருவதற்கு முன்பே மாவட்ட எல்லைகள் இழுத்து மூடியதால் பச்சையை நோக்கி வீறு நடைபோட்டது நீலகிரி.. இதற்கெல்லாம் காரணம் கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவின் முழு முயற்சிதான்!
எனினும் காய்கறிகள், மளிகை பொருட்கள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு தடை இல்லை என்று அறிவிக்கப்பட்டது. நீலகிரியில் விளையும் மலைக்காய்கறிகள் வெளிமாவட்டங்களுக்கு லாரிகளில் தினமும் விற்பனைக்காக எடுத்து செல்லப்பட்டு வருகிறது.
அப்படித்தான் சில தினங்களுக்கு முன்பு லாரி டிரைவர்கள் லோடு எடுத்துகொண்டு கோயம்பேட்டுக்கு சென்றனர்.. கோயம்பேடு பகுதியில் தொற்றுகள் நிறைய உருவாவதை கண்டதும், ஊட்டி டிரைவர்களுக்கு உடனடியாக கொரோனா டெஸ்ட் எடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.. கிட்டத்தட்ட ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து, சுமார் 40 பேர் சென்னை சென்றுள்ளனர், அதில் 27 பேர் கோயம்பேடு மார்கெட்டுக்கு காய்கறிகளை இறக்கி விட்டு திரும்பி வந்துள்ளனர் என தெரியவந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை நெருங்குகிறது- உயிரிழப்பு 1,693
டிரைவர்களின் ரத்தம், சளி மாதிரி எடுக்கப்பட்டு குன்னூர் பாஸ்டியர் இன்ஸ்டியூட் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த ரிசல்ட்டும் தற்போது வந்துள்ளது.. இதில் 4 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.. 20 முதல் 42 வயது வரை இருக்கும். 4 பேரும் கோவை இஎஸ்ஐ ஆஸ்பத்திரிக்கு உடனடியாக மாற்றப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை நடந்து வருகிறது.. சளி மாதிரி எடுக்கப்பட்ட மற்றவர்களின் ரிசல்ட்கள் இன்னும் வரவில்லை.
இதனிடையே, நீலகிரி மாவட்டத்தில் மதியம் 2 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் 2 மணி வரை மட்டுமே கடைகளை திறக்க வேண்டும் என கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்... 26 நாட்களாக யாருக்கும் தொற்று இல்லாத நிலையில் நேற்று 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளது, மாவட்ட மக்களை பெரிதும் கவலைக்குள்ளாகி வருகிறது.