தொடர் மழையால் பரிதவிக்கும் நீலகிரி மக்கள்.. நேரில் சென்று சந்தித்த ஸ்டாலின்.. உதவித்தொகை வழங்கினார்
தொடர் மழையால் பாதிக்கப்பட்ட நீலகிரி மாவட்டத்தில் இன்று திமுக தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்.
நீலகிரி: தொடர் மழையால் பாதிக்கப்பட்ட நீலகிரி மாவட்டத்தில் இன்று திமுக தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்.
நாடு முழுக்க தற்போது பல மாநிலங்கள் மழை காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. கேரளா, கர்நாடகா, குஜராத், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் மழை காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த தொடர் மழை காரணமாக தமிழகத்தில் அதிகம் பாதித்த பகுதி என்றால் அது நீலகிரிதான். நீலகிரியில் கடந்த 5 நாட்களாக விடமால் மழை பெய்து வருகிறது. அதிலும் கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மிக கனமழை பெய்தது.
அதேபோல் இன்னும் இரண்டு நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. அவலாஞ்சி, அப்பர் பவானி ஆகிய இடங்களில் கடந்த நான்கு நாட்களில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. நேற்று ஒரே நாளில் நீலகிரியில் 450 மிமீ மழை பெய்துள்ளது.
அதேபோல் இன்றும் 500 மிமீக்கும் அதிகமாக மழை பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. இந்த தொடர் மழை காரணமாக அங்கு பல நூறு மக்கள் வீடுகளை இழந்து இருக்கிறார்கள். அதேபோல் நீலகிரியில் இதனால் 15க்கும் அதிகமான மீட்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த நான்கு நாட்களில் அவலாஞ்சியில் 2528 மிமீ மழை பெய்துள்ளது. இதனால் அங்கு பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை இன்று எதிர்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் சென்று நேரில் பார்வையிட்டார்.
நீலகிரி சென்ற ஸ்டாலின் அங்கு திமுக உறுப்பினர்களுடன் சேர்ந்து மக்களை சந்தித்தார். மழையால் வீடுகளை இழந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் வழங்கினார். மழையில் சுவர் இடிந்து விழுந்து பலியான நீலவட்டம் பகுதியை சேர்ந்த அமுதா என்ற பெண்ணின் வீட்டிற்கு ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் கூறினார.
உயிரிழந்த அமுதாவின் கணவருக்கு ஆறுதல் தெரிவித்த ஸ்டாலின் உதவித்தொகையும் வழங்கினார். பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்த அவர், தேவையான உதவிகளை திமுக உறுப்பினர்கள் மூலம் செய்வதாக உறுதியளித்தார்.