"இங்க வாடா".. பழங்குடியின சிறுவனிடம் தன் செருப்பை கழற்ற சொன்ன திண்டுக்கல் சீனிவாசன்.. சர்ச்சை!
சிறுவனை கூப்பிட்டு தனது செருப்பை கழற்ற சொல்லி உள்ளார் அமைச்சர்!
Recommended Video
நீலகிரி: பழங்குடியினர் சிறுவனை கூப்பிட்டு தன்னுடைய காலில் இருந்த செருப்பை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கழற்ற சொன்னதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.. இது மிகப்பெரிய சர்ச்சையையும் ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், சிறுவனை அழைத்து செருப்பை கழற்ற சொன்னதற்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானை முகாமில், கோயில் வளர்ப்பு யானைகளுக்கு இன்று முதல் புத்துணர்வு முகாம் தொடங்க இருக்கிறது.
இதற்காக யானைகள் எல்லாம் வரிசையாக நிற்கவைக்கப்பட்டிருந்தன. வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இந்த முகாமை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
செருப்பு
நிகழ்ச்சியை தொடங்கி வைத்துவிட்டு, அமைச்சர் திரும்பி வந்து கொண்டிருந்தார்.. அவரை காண்பதற்காக சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமானோர் திரண்டு வந்திருந்தனர்... வரும் வழியில் அவரது செருப்பு புல்வெளியில் சிக்கிக் கொண்டது. பெல்ட் போட்ட செருப்பினை அமைச்சர் அணிந்திருந்தார். அப்போது தனது செருப்பின் பெல்ட்டை கழற்றிவிடுமாறு அங்கு நின்று கொண்டிருந்த ஒரு பழங்குடியின சிறுவனை கூப்பிட்டு சொன்னார்.
செருப்பு பெல்ட்
அந்த சிறுவனும், செருப்பின் பெல்ட்டை மட்டும் கழற்றிவிட்டான்.. இதற்கு பிறகு சீனிவாசனின் உதவியாளர் கீழே குனிந்து அந்த செருப்பை முழுசுமாக கழற்றிவிட்டார். இந்த சம்பவத்தை யாரோ வீடியோவும் எடுத்துவிட்டனர்.. உடனே சுதாரித்த குன்னூர் எம்எல்ஏ சாந்திராமு செய்தியாளர்களை படம் எடுக்கவிடாமல் தடுத்தார்.. மேலும் அதிமுகவினர் போட்டோ, வீடியோ எடுக்க விடாமல் மறைத்து கொண்டு நின்றனர்.. "யாரும் போட்டோ எல்லாம் எடுக்காதீங்க" என்று போலீஸார் இன்னொரு பக்கம் எச்சரித்தனர். சம்பந்தப்பட்ட சிறுவனின் அப்பா பாகனாக இருக்கிறாராம்.
அதிர்ச்சி
இந்த வீடியோவை சோஷியல் மீடியாவில் பதிவிடவும், இதுதான் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. சிறுவனை அழைத்து செருப்பை கழற்ற சொன்னதால் பழங்குடியின மக்களும் கடும் அதிருப்திக்குள்ளாகி உள்ளனர்.. சுற்றியிருந்தவர்களுக்கும் இது அதிர்ச்சியை தந்தது. பொதுவாக மனதில் பட்டதை அப்படியே பேசிவிடுவார் திண்டுக்கல் சீனிவாசன். எதையும் உள்நோக்கத்துடனும், சர்ச்சை தேவை என்பதற்காகவோ பேசமாட்டார்.. வெள்ளந்தி பேச்சுதான் என்றாலும், இவர் வாயை திறந்தாலே அது வைரலாகி விடும் அளவுக்கு சென்று விடும்.. இப்போது அமைச்சரின் இந்த செயல் அனைத்து தரப்பினருக்கும் பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.
வைரல் வீடியோ
அமைச்சர் சீனிவாசன், இதுவரை பழங்குடியினர் இனத்தை சேர்ந்த எத்தனையோ பேருக்கு பட்டா வழங்கி.. அவர்களுக்கான வேலை வாய்ப்புகளை வழங்கி உள்ளார்.. அவர்களுக்கான பல நலத்திட்டங்களையும் அறிவித்து வந்துள்ள நிலையில், இந்த சம்பவம் எதிர்மறை விமர்சனங்களுடன் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. சிறுவன் அமைச்சரின் காலில் உட்கார்ந்து செருப்பை கழட்டிவிடும் இந்த வீடியோதான் வைரலாகி வருகிறது.
விளக்கம்
இந்த சம்பவம் நடந்து கொஞ்ச நேரத்திற்கெல்லாம் தமிழகம் முழுக்க இந்த செய்தி எதிரொலித்தது.. இதையடுத்து, சிறுவனை அழைத்து செருப்பை கழற்ற சொன்னதற்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வருத்தம் தெரிவித்துள்ளார். "பெரியவர்களை அழைத்தால் தவறாகிவிடும் என்பதால் தான் சிறுவனை அழைத்தேன், அவன் என் பேரன் மாதிரி" என்றும் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.