மது அருந்திவிட்டு மனதை கல்லாக்கிக் கொண்டேன்.. நீலகிரியில் குழந்தையை கொன்ற தாய் பரபரப்பு வாக்குமூலம்
நீலகிரி: கோத்தகிரி அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து நான்கரை வயது சிறுமியை அவரது தாயே படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. குழந்தையை கொலை செய்ய வறுமையே காரணம் என்றும் தாய் வாக்குமூலம் அளித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள எம்.கைகாட்டியை சேர்ந்தவர் பிரபாகரன். இவருடைய மனைவி சஜிதா (32). இவர்களுடைய மகள்கள் சுபாஷினி (14), ஸ்ரீஹர்ஷினி (நான்கரை வயது).
பிரபாகரன் அதே பகுதியில் உள்ள சென்னையை சேர்ந்த மனோஜ் என்பவருக்கு சொந்தமான பங்களாவில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார்.
கோத்தகிரி போலீஸில் புகார்
கடந்த ஓராண்டுக்கு முன்பு பிரபாகரன் திடீரென இறந்துவிட்டார். இதனால் சஜிதா, மனோஜ் வீட்டில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அவர் நேற்று முன் தினம் இரவு தூங்க சென்ற தனது இளைய மகள் ஸ்ரீவர்ஷினியை காணவில்லை என கோத்தகிரி போலீஸில் புகார் அளித்தார்.
வேலைக்கு செல்லும் பகுதியில்
அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர், அப்போது சஜிதாவின் வீடு உள்ள எம்.கைகாட்டி பகுதியில் சிறுமியை தேடினர். அங்கு அவர் கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து சஜிதா வேலைக்கு செல்லும் பங்களா அருகே தேடினர்.
ஸ்ரீ வர்ஷினியின் பொம்மை
அப்போது அங்குள்ள 8 அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டியின் மூடியை போலீஸார் திறந்து பார்த்த போது அங்கு ஒரு பொம்மை தண்ணீரில் கிடந்தது. அந்த பொம்மை ஸ்ரீவர்ஷினியுடையது என அவரது சகோதரி சுபாஷினி உறுதி செய்தார்.
தண்ணீர் தொட்டி
இதையடுத்து அப்பகுதி மக்களின் உதவியுடன் தொட்டியில் இருந்த தண்ணீர் முழுவதையும் வெளியேற்றி சிறுமியின் உடலை போலீஸார் மீட்டனர். சிறுமியின் வீட்டில் இருந்து 20 மீட்டர் தொலைவில் தண்ணீர் தொட்டி உள்ளது.
முதற்கட்ட விசாரணை
அந்த தண்ணீர் தொட்டியின் மூடி இரும்பால் செய்யப்பட்டு உள்ளது. இதனால் அந்த இரும்பு மூடியை சிறுமி திறக்க வாய்ப்பு இல்லை. எனவே அந்த சிறுமி தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்டு இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
தாய் மீது சந்தேகம் கொண்ட போலீஸ்
இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தாயார் மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெற்ற குழந்தையே தாயை கொன்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.
வாக்குமூலம்
இதையடுத்து போலீஸார் விசாரிக்க வேண்டிய விதத்தில் துருவி துருவி விசாரணை நடத்தியதில் குழந்தையை கொன்றதை சஜிதா ஒப்புக் கொண்டார். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் வறுமையால் குழந்தையை கொன்றதாக வாக்குமூலம் அளித்தார்.
தோட்ட வேலை
சஜிதா கூறுகையில் எனது கணவர் உயிரோடு இருந்தபோது உடல்நிலை சரியில்லாததால் சிகிச்சைக்காக ரூ. 2 லட்சம் வரை கடன் பெற்றேன். அந்த கடனை அடைக்கவும் குழந்தைகளை காப்பாற்றவும் படாதபாடு பட்டு வந்தேன். இந்நிலையில் என் கணவர் பணியாற்றிய பங்களாவில் வேலை செய்து கொண்டே தோட்ட வேலைகளுக்கு சென்று வந்தேன்.
பொம்மையுடன் மூழ்கடித்த தாய்
ஆனால் எனது குழந்தை ஸ்ரீவர்ஷினியை என்னால் தனியாக விட்டு விட்டு செல்ல முடியவில்லை. இதனால் வேலைக்கும் செல்ல முடியவில்லை. இதனால் குழந்தையை கொல்ல முடிவு செய்தேன். எனவே இரவு மது அருந்திக் கொண்டு என மகளிடம் சென்றேன். அப்போது அவர் பொம்மையை கட்டிப் பிடித்துக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தார். அந்த பொம்மையுடன் அவளையும் தூக்கிக் கொண்டு நான் வேலை பார்த்த பங்களா அருகே உள்ள தண்ணீர் தொட்டிக்குள் அழுத்தி கொன்றேன் என வாக்குமூலம் அளித்தார்.