இதுவரை கண்டதில்லை.. நீலகிரியில் குவியும் புதிய வகை வெட்டுக்கிளிகள்.. அதுவா இது? பீதியில் விவசாயிகள்
ஊட்டி: தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் புதிய வகை வெட்டுக் கிளிகள் நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ளதால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.
Recommended Video
நீலகிரி மாவட்டம் காந்தல், புல்பள்ளி பகுதியில், புதிய வகை வெட்டுக்கிளி ஒன்றை கடைக்காரர்களும், விவசாயிகளும் பார்த்துள்ளனர். இதுகுறித்து அவர்களுக்கு அச்சம் எழுந்துள்ளது. வட மாநிலங்களில் அட்டகாசம் செய்து வரும் வெட்டுக்கிளிகளாக இருக்குமோ என்று அவர்கள் பீதியடைந்தனர்.
வெட்டுக்கிளிகளை டப்பாவில் போட்டு அடைத்து, அதை, தோட்டக்கலைத்துறை அதிகாரிகளை நோக்கி ஓடினர் மக்கள். அங்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தென் இந்தியாவிற்கு பரவும் வெட்டுக்கிளி தாக்குதல் அபாயம்? கர்நாடகாவிற்கும் வார்னிங்.. பரபரப்பு
லாரிகளில் வந்ததா
இது வடமாநிலத்தில் இருந்து பொருட்களை எடுத்து வந்த லாரிகளில் வந்ததா அல்லது சாதாரண வெட்டுக்கிளியா என்பது பற்றி ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இதனிடையே தமிழக கேரள எல்லையில் உள்ள புதிய ரக வெட்டுக்கிளிகளால் பயிர்களுக்கு எவ்வித சேதமும் ஏற்படாது என தோட்டக்கலைத் துறை தெரிவித்துள்ளது.
சாதாரண வெட்டுக்கிளிகள்
சாதாரண புள்ளி வெட்டுக்கிளிகள்தான் தமிழக கேரள எல்லைப் பகுதியில் காணப்படுவதாக தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் கூறப்பட்டுள்ளது. இவை வட மாநிலங்களில் பயிர்களில் சேதம் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் locust வெட்டுக்கிளிகள் கிடையாது என்றும், தமிழக-கேரள எல்லையில் காணப்படும் இந்த வெட்டுக்கிளிகள் இலைகளை மட்டுமே சாப்பிடக் கூடியது எனவும் தெரிவித்துள்ளனர்.
இதுவரை பார்க்கவில்லை
இருப்பினும், இப் பகுதியில் முதல் முறையாக இதுபோன்ற வெட்டுக்கிளிகள் சுற்றுவதால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். இதுவரை அப்பகுதி மக்கள் கண்டிராத வெட்டுக்கிளி இது என்று கருதப்படுகிறது. மக்களின் அச்சத்தை போக்க கூடுதலாக ஆய்வுகள் மேற்கொள்ள கோரிக்கை எழுந்துள்ளது. கர்நாடகாவிற்கு வெட்டுக்கிளி ஆபத்து பற்றி எச்சரிக்கைபிறப்பிக்கப்பட்ட நிலையில், அண்டை மாவட்டமான நீலகிரி வரை அவை வந்திருக்குமோ என்ற அச்சமும் மக்களுக்கு உள்ளது.
வட மாநிலங்கள்
பாகிஸ்தானில் இருந்து கடந்த ஏப்ரல் 11ம் தேதி முதல் தொடங்கிய வெட்டுக்கிளிகள் ஊடுருவல், தற்போது ராஜஸ்தான் மாநிலத்தின், 20 மாவட்டங்களில் பரவியுள்ளன. கடந்த வருடம் 12 மாவட்டங்களில் மட்டும் பாதித்த நிலையில் இந்த ஆண்டு அதன் பரவல் அதிகமாக உள்ளது. மேலும், இந்த முறை வந்துள்ள வெட்டுக்கிளிகள் பல முதிராத இளம் பருவத்தில் இருப்பதால் அவை பயிர்களை அழிக்கும் விகிதம் பல மடங்கு அதிகமாக இருக்கும் என அஞ்சப்படுகிறது.