அழுக்கு துணி, பரட்டை தலையுடன்.. சுற்றித் திரிந்த பெண்.. கருணை காட்டி மீட்ட நீலகிரி கலெக்டர்
மனநலம் பாதித்த பெண்ணை மீட்க நீலகிரி கலெக்டர் நடவடிக்கை எடுத்தார்.
Recommended Video
ஊட்டி: அழுக்கு துணி, பரட்டை தலை... என்று காட்சியளித்த பெண் இன்று ஆளே மாறிப் போய் காணப்படுகிறார்.
ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் நான்கைந்து மாதமாக ஒரு பெண் நடமாடி கொண்டே இருந்தார். 45 வயதிருக்கும். அவரது துணியெல்லாம் கிழிந்து தொங்கியது, தலை சீவியே பல வருடங்கள் ஆனது போல இருந்தது.
ஆனால் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். அதனால் யாரை பார்த்தாலும் ரோட்டில் கிடக்கும் கல்லை தூக்கி அவர்கள் மீது எறிந்து விடுவார். இதனால் உதவி செய்யக்கூட யாருமே இவரிடம் போக பயந்தார்கள். அதையும் மீறி உதவி செல்ல சென்றால், கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்டி விரட்டி அனுப்பி விடுவார்.
காரை நிறுத்த சொன்னார்
இந்த நிலையில், இன்று காலை நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா குன்னூருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது இந்த பெண்ணை கண்டதும் காரை நிறுத்த சொல்லி விட்டார். ஊட்டியில் இப்போது பனி கொட்டி வருவதால், எல்லோருமே குளிரில் நடுங்கி கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த பெண்ணுக்கோ அணிந்திருந்த துணி கிழிந்து கிடந்தது. அதனால் அதிக குளிரில் நடுங்கி ஒரு ஓரமாக முடங்கி உட்கார்ந்திருந்தார்.
இங்க இருக்க கூடாது
இதனை கண்ட கலெக்டர், அருகிலிருந்த அதிகாரியிடம், "என்ன செய்வீங்களோ தெரியாது... நாளை இவங்க இந்த இடத்தில் இருக்க கூடாது. கருணை இல்லத்தில் உடனடியாக சேர்த்து விடுங்க" என்று உத்தரவிட்டார். இதையடுத்து, அதிகாரிகள், உதகையில் சமூக ஆர்வலரும், டாக்டர் அப்துல் கலாம் கல்வி மற்றும் பசுமை அறகட்டளை மாவட்ட தலைவருமான தஸ்தகீரை தொடர்பு கொண்டு உடனடியாக சம்பவ இடத்துக்கு வர சொன்னார்கள்.
பேச்சு தந்தார்கள்
பிறகு விவரத்தை சொல்லி பெண்ணை மீட்டு செல்ல முடிவு செய்தார்கள். ஆனால் அந்த பெண்ணிடம் செல்லவே தயக்கமாக இருந்தது. எப்போது என்ன செய்வாரோ? திட்டுவாரோ? என்று கொஞ்ச நேரத்துக்கு திணறினார்கள். பிறகு, உலிக்கல் சண்முகம் என்பவர் உதவியுடன் அதிகாரிகள் மெதுவாக பெண்ணிடம் பேச்சு தந்தார்கள்.
அன்பான வார்த்தை
அன்பான வார்த்தைகளை பேசி பேசி அவரை மீட்கும் முயற்சியில் இறங்கினார்கள். வந்தவர்கள் என்ன பேசுகிறார்கள் என்றுகூட அந்த பெண்ணால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அன்பான குரல் கேட்ட பிறகு அந்த பெண் அமைதியானார். நீண்ட நேரம் கழித்து அதிகாரிகள் அவரை தங்களுடன் அழைத்ததும் கூடவே வந்தார்.
புது ஆடை
அங்கிருந்த ஆட்டோ ஒன்றில் அந்த பெண்ணை ஏற்றி கொண்டு அதிகாரிகள் அப்துல் கலாம் கருணை இல்லத்தில் கொண்டு போய் சேர்த்தனர். அங்கு உள்ளே நுழைந்ததும் பெண்ணுக்கு முதலில் சாப்பாடு, தண்ணீர் தரப்பட்டது. வேறு ஒரு ஆடை அணிவிக்கப்பட்டு, குளிருக்கு சால்வைகளும் வழங்கப்பட்டன. உடனடியாக இது குறித்த தகவலும் கலெக்டருக்கு சொல்லப்பட்டது.
ஊட்டி மக்கள் நிம்மதி
இவ்வளவு நாள் போறவங்க, வர்றவங்களை எல்லாம் கல்லால் அடித்து விரட்டி கொண்டிருந்த அந்த பெண், பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டு விட்டார் என்பதை கேள்விப்பட்டு ஊட்டி மக்கள் நிம்மதி அடைந்தார்கள்.