ரெட் அலர்ட் எச்சரிக்கை எதிரொலி.. நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு லீவு
ஊட்டி: கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் நாளை அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கன்னியாகுமரி முதல் சென்னை வரை பல பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இன்னும் சில நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக மழை பெய்யக்கூடும் என்றும், அதிலும், குறிப்பாக, தேனி, திண்டுக்கல், கோவை மற்றும் நீலகிரி ஆகிய மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டியுள்ள 4 மாவட்டங்களிலும் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நான்கு மாவட்டங்களும் ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ரெட் அலர்ட், பிறப்பிக்கப்பட்டாலும், பொதுமக்கள் அதற்காக பீதியடைய தேவையில்லை என்றும், இது நிர்வாக ரீதியாக முன்னெச்சரிக்கை எடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட அறிவிப்புதான் என்றும், சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெளிவுபடுத்தியுள்ளது.
இருப்பினும், கன மழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லக்கூடிய மாணவ, மாணவிகள் பாதிப்படைவார்கள் என்பதால் நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் போவதாக, அந்த மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அனேகமாக, ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்ட பிற மாவட்ட நிர்வாகங்களும் இதுபோன்ற முடிவுகளை எடுக்கலாம், அல்லது எடுக்காமலும் இருக்கலாம், தற்போதைய தகவல்படி, நீலகிரி மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது, என்பது குறிப்பிடதக்கது.
எச். ராஜா விட்டாரு பாருங்க சாபம்.. தேறாது தேறாது.. என்ன செய்ய போகிறது காங்கிரஸ்!
கேரளாவை பொறுத்தளவில், திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, பத்தினம்திட்டா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, மற்றும் வயநாடு உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று, ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கொல்லம், ஆலப்புழா, பத்தினம்திட்டா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கு, ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவைப் பொருத்தளவில், மீண்டும் பலத்த மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. வட கிழக்கு பருவமழைக்கு முன்னதாக, ஆகஸ்டில், வெள்ளத்தால் 80 பேர் அந்த மாநிலத்தில் உயிரிழந்தனர். அந்த பாதிப்பிலிருந்து மக்கள் இன்னும் மீளாத நிலையில், பெலகாவி, தார்வாட், கதக், ஹவேரி மற்றும் பாகல்கோட் உள்ளிட்ட வடக்கு கர்நாடக மாவட்டங்கள் மீண்டும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. இம்மாவட்டங்கள் மற்றும், சிக்மகளூர் மற்றும் சிவமோகா மாவட்டங்கள் உட்பட மல்நாட் பகுதிகளில் ஆரஞ்ச் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.