புல்வெளி.. புல்வெளி தன்னில்.. பனிக்கட்டி.. பனிக்கட்டி.. காஷ்மீராக மாறிய ஊட்டி!
ஊட்டியில் கடுமையான உறைபனி பொழிந்து வருவதால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.
Recommended Video
ஊட்டி: ரோட்டில் உறைந்து கிடக்கும் பனிக்கட்டிகளை அலேக்காக கைகளில் அள்ளி அள்ளி எடுக்கலாம்... அப்படி இருக்கிறது ஊட்டி உறைபனி!!
கடந்த சில நாட்களாக ஊட்டியில் இரவு நேரங்களில் கன மழையும், பகலில் மேக மூட்டமும் காணப்படுகிறது. புறநகர் பகுதிகளிலும் இதே நிலை நீடிக்கிறது.
ஊட்டியே குளிரில் நடுங்குவதை கேள்விப்பட்டு, சுற்றுலா பயணிகள் யாரும் வருவது கிடையாது. அப்படியே வந்தாலும் தாக்கு பிடிக்க முடியாமல் ஓரிரு நாளில் கிளம்பி விடுகிறார்கள்.
பொங்கல் லீவு
இலைகள் கருகி வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால், தேயிலை, விவசாய தோட்ட கூலி தொழிலாளிகள் கவலையில் உள்ளனர். இயல்பு நிலை மாறி போய் உள்ளதால், எப்படா பொங்கல் லீவு வரும் என்று மாணவர்களும், வேலைக்கு செல்பவர்களும் பெருத்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இவ்வளவு குளிரா?
"இந்த வருஷம் என்ன இவ்வளவு குளிரா இருக்கு" என்று ஒருவருக்கொருவர் சாலையில் பேசியபடி நடுங்கி கொண்டு செல்கிறார்கள். இரவெல்லாம் குளிரும், பகலெல்லாம் சிறுதுளி பனி சாரலும் கொட்டி வருவதால், மாவட்ட மக்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. பசுமை படர்ந்து காணப்படும் உதகை தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட இடங்கள் சாம்பல் நிறத்திலும், சில சமயங்களில் கருமை படர்ந்தும் காணப்படுகின்றன.
3 டிகிரி
இந்த மாசம் முழுவதும் ஊட்டியில் இப்படித்தான் குளிர் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால், ஊட்டியில் நவம்பர் மாதத்தின் 2-வது வாரம் துவங்கி, பிப்ரவரி 2-வது வாரம் வரை பனிக்காலம் நீடிக்கும்.
நகர்ப்பகுதியிலேயே குளிர் மைனஸ் 3 டிகிரி என்று இருக்கும்போது, தேயிலை பகுதிகளில் இன்னும் குறைந்து காணப்படுகிறது.
பனிக்கட்டிகள்
ஊட்டி தலைக்குந்தா, எச்.பி.எப்., சூட்டிங் மட்டம், ரயில் நிலையம், ரேஸ்கோர்ஸ் உள்ளிட்ட இடங்களில் உறைபனி விழுந்த புல்வெளி பகுதிகள், காஷ்மீரை போன்று பனிக்கட்டிகளாய் காட்சியளிக்கின்றன.
வாகனங்களின் மேல்பரப்பிலும் இதே பனிக்கட்டிகள் காலை நேரங்களில் உறைந்துள்ளன.
வாட்டர் பாட்டில்
வாட்டர் பாட்டிலில் உள்ள தண்ணீரை திறந்து கொட்டினால்கூட தண்ணீர் கொட்டாமல் பாட்டிலுக்குள்ளேயே கெட்டித்து விடுகிறது. அதனால் சுற்றுலா தலங்கள் மட்டுமல்லாமல் சாதாரண சாலைகளே வெறிச்சோடி கிடக்கின்றன. ஆனால் டீ கடைகளில் மட்டும் கூட்டம் எந்நேரமும் நிறைந்து வழிகிறது.