ஈரக்குலையே நடுங்குது.. யானையை உயிரோடு கொளுத்திய குரூரர்கள்.. மிரட்சியில் மசினகுடி.. வெளியானது வீடியோ
மசினகுடியில் யானையை தீ வைத்து எரித்த சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது
நீலகிரி: இதயமே பற்றி கொண்டு எரிகிறது இந்த கொடூர காட்சியை கண்டால்.. முதுகில் காயம் ஏற்பட்டு, உயிருக்கு போராடும் ஒரு யானை மீது, சிலர் தீ வைத்து கொளுத்தும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
நீலகிரி மாவட்டம், மசினகுடி பகுதியில் சில நாட்களுக்கு முன்பு 40 வயது மதிக்கத்தக்க ஒரு யானை சுற்றி சுற்றி வந்தது.. பிறகுதான் அதன் முதுகில் காயம் இருந்தது தெரியவரவும், வனத்துறையினர் அந்த யானைக்கு சிகிச்சை தந்தனர்.. உடல்நிலையும் கொஞ்சம் கொஞ்சமாக தேறி வந்தது.
Recommended Video
இந்நிலையில் 3 நாட்களுக்கு முன்பு அந்த யானையின் காது திடீரென கிழிந்து ரத்தம் கொட்ட தொடங்கியது.. வலியும் வேதனையும் தாங்க முடியாமல் யானை அலறியது.. அந்த சத்தம் கேட்டு வனத்துறை ஊழியர்கள் விரைந்து வந்து யானையை முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமுக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர்.
போஸ்ட் மார்ட்டம்
ஆனால், யானை சில நிமிடங்களில் மயங்கி விழுந்துவிட்டது.. வனத்துறை டாக்டர்கள் எவ்வளவோ முயன்றும் யானையை காப்பாற்ற முடியவில்லை.. அதற்கு பிறகு போஸ்ட் மார்ட்டம் நடத்தினர்.. யானையின் காது பகுதியை பெட்ரோல் வைத்து தீ மூட்டி எரித்ததற்கான தடயங்கள் தென்பட்டன.. யானை மீது ஆசிட் ஊற்றியும் காயப்படுத்தியிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்பட்டது..
ஆசிட்
தான், காது பகுதி வெந்து போய், யானை துடிதுடித்து இறந்ததும் போஸ்ட் மார்ட்டம் செய்தபோது தெரியவந்தது.. அந்த காயங்களினால் யானையின் உடலில் இருந்து சுமார் 40 லிட்டர் வரை ரத்தம் வெளியேறிவிட்டதாகவும், முதுகு பகுதியில் ஏற்பட்டிருந்த பழைய காயத்தால் யானையின் 2 விலா எலும்புகள் துண்டிக்கப்பட்டிருந்ததாகவும் டாக்டர்கள் சொன்னார்கள்.. இதை கேட்டு நீலகிரி மாவட்டமே அதிர்ந்து போய்விட்டது..
விசாரணை
கடந்த 3 நாட்களாகவே இந்த யானையின் இழப்பு மலை மக்களை உலுக்கி எடுத்தது.. எனவே, இந்த கொடுஞ்செயலை செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகளை ஆவேசமாக விடுத்து வந்தனர்.. மற்றொரு பக்கம், வனத்துறையினரும், யானையை சித்ரவதை செய்து கொன்றவர்கள் குறித்து க்ளூ ஒன்று கிடைத்துள்ளதாகவும் விரைவில் அவர்கள் கைதாவார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்திருந்தனர். இந்நிலையில், ஒரு சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.. அதில் உயிரிழந்த யானைக்கு சிலர் தீ வைப்பது பதிவாகி உள்ளது..
இருட்டு நேரம்
இருட்டு நேரம்.. முதுகில் அடிபட்டு ரத்தம் சொட்ட சொட்ட ஒரு யானை தட்டு தடுமாறி வருகிறது.. அப்போதே அந்த யானைக்கு பாதி உயிர் போயிருக்கும்.. மிச்சம் உயிரை காப்பாற்றி கொள்ள புகலிடம் தேடி தள்ளாடி ஒரு தனியார் ரிசார்ட்டுக்குள் நுழைகிறது.. இதை பார்த்ததும் அந்த ரிசார்ட்டு ஊழியர்கள் யானையை அடித்து விரட்ட முயல்கிறார்கள்.. ஆனால், ஏற்கனவே இருந்த ரணங்கள் காரணமாக யானையால் வேகமாக அங்கிருந்து நகர முடியவில்லை.. அப்போதும் ஊழியர்கள் விடவில்லை.. யானை மீது எரியும் இரு சக்கர வாகனங்களின் டயர்களை தூக்கி வீசினார்கள்.. அந்த நெருப்பு டயர்கள், யானையின் தலை மீது விழுகிறது..
நெருப்பு
வலி பொறுக்க முடியாமல் யானை அலறுகிறது.. எரியும் டயர் விழுந்ததால் யானையின் தலை மற்றும் காது பகுதி சேர்த்து எரிந்து காயமாகிறது.. ஜிகுஜிகுவென தீ பற்றி எரிந்த நிலையில், பிளிறி கொண்டே யானை அங்கிருந்து நகர்கிறது. இதன்பிறகுதான் அவ்வளவு ரத்தம் வெளியேறி, துடிதுடித்தவாறே யானை தன் உயிரை விட்டுள்ளது. இந்த சிசிடிவி காட்சி வெளியாகி பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. யானைக்கு சொந்தமான இடங்களை பிடித்து வைத்து கொண்டு, அந்த யானைக்கே இன்று இடமில்லாமல் விரட்டி விட்டதுடன், உயிரோடு கொளுத்திய கொடுமை எங்குமே நடக்காது..!