பூவரசம் பூ பூத்தாச்சு.. மீண்டும் ஓடத் தொடங்கியது ஊட்டி மலை ரயில்!
ஊட்டி: 8 நாட்களுக்கு பின்பு உதகை மலை ரயில் சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதால் உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகள் மலை ரயிலில் பயணம் செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். பாரம்பரிய மிக்க இந்த மலை ரயில், மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை வரை இயக்கப்பட்டு வருகிறது. நீராவி எஞ்சின் மூலம் இயங்கும் இந்த மலை ரயில், யுனெஸ்கோ அந்தஸ்து பெற்றுள்ளது.
நீலகிரி மலை ரயில் பயணத்தில், மலைகளை குடைந்து செல்லும் தண்டவாளங்கள், பாறைகளை குடைந்து அமைக்கப்பட்டிருக்கும் குகைகள், கண்களுக்கு விருந்தாக அமையும் வனப்பகுதிகள் என இயற்கை அழகை கண்டுகளிப்பதற்காக இந்தியா மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் மலை ரயில் பயணம் மேற்கொள்ள அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் பெய்த கன மழையின் காரணமாக, மேட்டுப்பாளையம் - உதகை செல்லும் மலை ரயில் தண்டவாளத்தில் மண்சரிவு மற்றும் பாறைகள் விழுந்தன. இதனால் கடந்த 2 ஆம் தேதி முதல் மலை ரயில் சேவை நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் மலை ரயில் பாதை சீரமைக்கப்பட்டதையடுத்து மேட்டுப்பாளையத்திலிருந்து உதகையை நோக்கி மலை ரயில் சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதனிடையே நீலகிரி மாவட்டம் குன்னூர் இரயில் நிலையத்திலிருந்து நீராவி என்ஜின் பொருத்தப்பட்ட மலை இரயிலில் உலக நாடுகளை சுற்று பார்ப்பதில் ஆர்வமுள்ள ஆஸ்திரேலியா, ரசியா, அர்ஜென்டினா, அமெரிக்கா போன்ற நாடுகளை சேர்ந்த 71 பேர் உதகை மலை இரயிலை மொத்தமாக 2 லட்சத்து 766 ரூபாய் தொகை செலுத்தி பயணம் செய்து மகிழ்ந்தனர்.