கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு.. மேலும் 2 பேர் கைது.. சயான், மனோஜை பிடிக்க தீவிரம்
உதகை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கேரளாவைச் சேர்ந்த தீபு, பிஜின்குட்டி ஆகியோரை நீலகிரி போலீசார் கைது செய்தனர். ஜாமீன் ரத்து செய்யப்பட்ட சயான், மனோஜ் ஆகியோரை தேடி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள கொடநாடு 2017ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி 11 பேர் கொண்ட கும்பல் நள்ளிரவில் நுழைந்தது. அங்கு காவலில் இருந்த ஓம்பகதூரை கொலை செய்து விட்டு, பங்களாவுக்கு நுழைந்து சில ஆவணங்களை எடுத்து சென்றனர்.
இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான சேலம் ஆத்தூரை சேர்ந்த கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்துவிட்டார். மற்ற 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கு உதகை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
கடந்த மாதம் டெல்லியில் தெகல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் முன்னிலையில் சயான், வாளையார் மனோஜ் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து, கொடநாடு வழக்கில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு உள்ளதாக கூறினர்.
இதையடுத்து, அவர்களை தமிழக போலீசார் டெல்லியில் கைது செய்தனர். சென்னை அழைத்து வரப்பட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். ஆனால், அவர்களை சிறையில் அடைக்க நீதிபதி மறுத்துவிட்டார்.
இதனையடுத்து இருவருக்கும் ஜாமீனை ரத்து செய்வதாகவும், உடனடியாக காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிடப்பட்டது. மேலும், சயான், வளையார் மனோஜ், திபு, பிஜின் ஆகியோருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்தும் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கேரளாவை சேர்ந்த தீபு, பிஜின்குட்டி ஆகியோரை நீலகிரி போலீசார் கைது செய்தனர். சயான், வளையார் மனோஜ் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.