"திரும்பி வாடா.. என்னால முடியல".. தும்பிக்கையை பிடித்து.. கதறி கதறி அழுத எஸ்.ஐ.. நொறுக்கும் வீடியோ!
றந்து போன யானையின் தும்பிக்கையை பிடித்து கதறி அழுதார் வனத்துறை ஊழியர்
ஊட்டி: "திரும்பி வாடா.. என்னால முடியல.. யாருகிட்ட இனிமேல் பழங்களை தருவேன்" என்று இறந்த யானையின் தும்பிக்கையை பிடித்து கொண்டு வனத்துறை எஸ்ஐ ஒருவர் கதறி கதறி அழும் வீடியோ இணையத்தில் காண்போரை தூக்கி வாரி போட்டு வருகிறது.
Recommended Video
நீலகிரி மாவட்டம், மசினகுடி பகுதியில் சில நாட்களுக்கு முன்பு ஒரு யானை சுற்றி வந்தது.. அந்த யானைக்கு 40 வயதிருக்கும்.. அதன் முதுகில் காயம் இருந்தது. இதை பார்த்த வனத்துறையினர் அந்த யானைக்கு கடந்த மாதம் சிகிச்சை தந்தனர்.. உடல்நிலையும் கொஞ்சம் கொஞ்சமாக தேறி வந்தது.
இந்நிலையில், 3 நாட்களுக்கு முன்பு அந்த யானையின் காது கிழிந்து ரத்தம் கொட்ட தொடங்கியது.. வலியும் வேதனையும் தாங்க முடியாமல் யானை, அங்குள்ள தண்ணீருக்குள் நின்று அலறியது. இதனையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அந்த யானையை வனத்துறையினர் முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமுக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர்.
மயக்க ஊசி
அதற்காக வாசிம், விஜய், கிருஷ்ணா, கிரி என்ற 4 கும்கி யானைகளையும் வரவழைத்தனர்.. கால்நடை மருத்துவர்கள் 2 முறை அந்த யானைக்கு மயக்க ஊசியை செலுத்தினர்.. யானையும் சில நிமிடங்களில் மயங்கி விழுந்துவிட்டது.. இதை பார்த்த டாக்டர்களும், வனத்துறையினரும் அதிர்ச்சி அடைந்தனர். பிறகு கும்கி யானைகள் உதவியுடன் அந்த யானையை லாரியில் ஏற்றி சிகிச்சைக்கு எடுத்து சென்றனர்.
மன வேதனை
ஆனால் யானை பரிதாபமாக இறந்துவிட்டது. எவ்வளவோ முயற்சித்தும் யானையை காப்பாற்ற முடியவில்லை என்று வனத்துறை அதிகாரிகள் கடுமையான மன வேதனை அடைந்தனர்.. அதில் ஒரு வனத்துறை ஊழியர்கண்ணீர் விட்டு கதறி அழ ஆரம்பித்து விட்டார்.. அவர் பெயர் பெள்ளன்.
பெள்ளன்
லாரியில் சடலமாக இருந்த அந்த யானையின் தும்பிக்கையை பிடித்து கொண்டு பெள்ளன் கதறி கதறி அழுதார்.. இவர்தான் அந்த யானைக்கு சிகிச்சையின்போது சாப்பாடு தந்து கொண்டிருந்தாராம்.. தினமும் பழங்களை யானைக்கு தந்துள்ளார்.. யானை இப்போது இறந்தது பார்த்து, "நான் யாருகிட்ட இனிமேல் பழங்களை தருவேன்.. திரும்பி வாடா.. என்னால முடியல... என்னை விட்டு போகாதேடா.." என்ற தும்பிக்கையை பிடித்து கொண்டே இவர் அழுதது அங்கிருந்த மற்ற அதிகாரிகளையும் கண்கலங்க வைத்துவிட்டது.
பெட்ரோல் - ஆசிட்
இதற்குபிறகுதான் யானைக்கு போஸ்ட் மார்ட்டம் நடத்தப்பட்டது.. அப்போதுதான் யானையின் காது பகுதியை பெட்ரோல் வைத்து தீ மூட்டி எரித்ததற்கான ஆதாரங்கள் தென்பட்டுள்ளன.. மேலும் மேலும் யானை மீது ஆசிட் ஊற்றியும் காயப்படுத்தியிருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது. அந்த ஆசிட்டை ஊற்றியதாலும், பெட்ரோல் ஊற்றி எரித்ததாலும்தான், காது பகுதி வெந்து போய், யானை துடிதுடித்து இறந்ததும் தெரியவந்துள்ளது... இந்த காயத்தினால் யானையின் உடலில் இருந்து சுமார் 40 லிட்டர் வரை ரத்தம் வெளியேறியிருக்கிறதாம்.
விசாரணை
அதேபோல, யானையின் முதுகு பகுதியில் ஏற்பட்டிருந்த பழைய காயத்தால் யானையின் 2 விலா எலும்புகள் துண்டிக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.. யார் இந்த படுபாதக செயலை செய்தது என்று தெரியவில்லை. வனத்துறையினர் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்க உள்ளனர்.. அந்த மர்மநபர்கள் பற்றி க்ளு ஒன்று கிடைத்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.. இதனால் எப்படியும் விரைவில் அவர்கள் கைதாவார்கள் என்று தெரிகிறது. வனத்துறை ஊழியர் பெள்ளன் யானையை பிடித்து கொண்டு அழுத கண்ணீர் வீடியோ இணையத்தில் வைரலாகி, அனைவர் மனதையும் பிசைந்தெடுத்து வருகிறது.