பூவரசம்பூ பூத்தாச்சு.. 10 மாசமாச்சு.. ஊட்டி ஸ்டேஷனில் குவியும் மக்கள்.. ஓட தொடங்கியது மலை ரயில்!
ஊட்டி மலைரயில் இன்று முதல் ஓட தொடங்கியது
கொரோனா தொற்று காரணமாக கடந்த 10 மாதமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஊட்டி மலை ரயில் போக்குவரத்து இன்று மீண்டும் ஓட தொடங்கியது..
கடந்த மார்ச் மாதம் முதல் உதகை மலை ரயில் சேவை நிறுத்தப்பட்டது.. அதேபோல சுற்றுலா பயணிகளும் ஊட்டிக்கு இந்த காலகட்டங்களில் வருகை தரவில்லை.
இதையடுத்து கொரோனா குறைந்து வருவதால் தளர்வுகளின் அடிப்படையில் தனியார் கட்டுப்பாட்டில் வார இறுதி நாட்களில் மலை ரயில் சேவை இயங்கி வந்தது. தற்போது பண்டிகை காலம் என்பதால், சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு அதிகமாக வந்து கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், இன்றுமுதல் மலை ரயில் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்திருந்தது.. இந்த அறிவிப்பினால் சுற்றுலா பயணிகள் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.. அதனால், இன்று காலையிலேயே ரயில்வே ஸ்டேஷனில் பயணிகள் குவிய தொடங்கிவிட்டனர்.. ரயில் ஸ்டேஷனில் கிளம்பாமல் நின்று கொண்டிருந்தது.. அதற்கு முன்பு சென்று, ஏராளமான செல்பிக்களையும் எடுத்து கொண்டனர்,.
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு தினமும் காலை 7.10 மணிக்கும், குன்னூரில் இருந்து ஊட்டிக்கு 7.45 மணிக்கும் ரயில் இயக்கப்படுவதால், ரிசர்வ் செய்த பயணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முதல் வகுப்பு ரூ.575, இரண்டாம் வகுப்பு ரூ.270 ஆகும்..
சாதாரணமாக மலை ரயிலில் செல்ல இருந்த கட்டணத்தை விட சிறப்பு ரெயிலில் செல்ல பல மடங்கு உயர்த்தப்பட்டிருந்தது... இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியதால் இந்த திட்டம் கைவிடப்பட்டது. தற்போது 10 மாசத்துக்கு பிறகு மறுபடியும் வழக்கமான கட்டணத்தில் மலை ரயில் சேவை தொடங்கி உள்ளது டபுள் சந்தோஷத்தை பயணிகளுக்கு தந்து வருகிறது.
மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை 4 பெட்டிகளுடன் இருக்கும்.. குன்னூர் முதல் ஊட்டி வரை 5 பெட்டிகள் இருக்கும்.. இந்த மலை ரயிலானது, பனிபடர்ந்த அடர்ந்த காட்டுப்பகுதி மலைப்பாதையில் செல்லும் அழகே தனி அலாதியானது.. அப்போது, சுற்றுலா பயணிகள் அந்த இயற்கை காட்சிகளை கண்டு குதூகலமாவார்கள்.. அப்படித்தான் ஊட்டி அழகில் அவர்கள் மூழ்கி வருகிறார்கள்!