உன் குழந்தையா இருந்தா இப்படி போடுவியா.. கொந்தளித்து பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்
Recommended Video
ஊட்டி: "ம்மா.. என் சாப்பாட்டுல வண்டு இருந்துச்சு.. புழு நெளிந்துச்சும்மா" என்று பிள்ளைகள் சொன்னதை கேட்டு பெற்றோர்கள் கொதித்து போய்விட்டனர். "உன் குழந்தையா இருந்தா இப்படி போடுவியா.. அடுத்தவங்க குழந்தைன்னா உங்களுக்கு எளக்காரமா?" என்று பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்ட கேள்வி கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள பிக்கட்டி பஜாரில் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு சுற்றுவட்டார பகுதிகளான சிவசக்தி நகர், பாரதியார் புதூர், குந்தா கோத்தகிரி, முள்ளிகூர், ஆடா உட்பட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இவர்கள் பெரும்பாலும் கூலித்தொழிலாளர்களின் குழந்தைகள் ஆவார்கள். இங்கு படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.
மதிய உணவு
இதில் கொஞ்ச நாளாகவே சாப்பாட்டில் புழு, பூச்சிகள் இருப்பதாக சொல்லப்பட்டது. இதை மாணவர்களும் தங்கள் வீட்டில் பெற்றோரிடம் முறையிட்டு வருகின்றனர். நிறைய முறை இந்த மாணவ-மாணவிகளுக்கு உடம்பு சரியில்லாமலும் போய் உள்ளது.
ஆத்திரம்
இந்த நிலையில் நேற்றுமுன்தினமும் தரப்பட்ட சாப்பாட்டில் வண்டுகள், புழு, பூச்சிகள் நெளிந்துள்ளன. பிள்ளைகள் இந்த விஷயத்தை வீட்டில் போய் சொல்லவும், பெற்றோர்கள் ஆத்திரமடைந்தனர். நேற்று திரண்டு வந்து பள்ளியை முற்றுகையிட்டனர்.
தாசில்தார்
சத்துணவு அமைப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முழக்கமிட்டனர். தகவலறிந்து குந்தா தாசில்தார் சரவணன் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சமையல் செய்ய வைக்கப்பட்டிருந்த பருப்புகளில் பூச்சி, புழுக்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சத்துணவு அமைப்பாளர் அமராவதியிடம் பெற்றோர்கள் சரமாரி கேள்வி எழுப்பினர்.
ஆவேசம்
"உன் குழந்தையா இருந்தா இப்படி போடுவியா.. அடுத்தவங்க குழந்தைன்னா உங்களுக்கு எளக்காரமா?" என்றனர். இதையடுத்து அதிகாரிகள் இதில் தலையிட்டு சமரசம் பேசி, இது சம்பந்தமான கண்டிப்பு நடவடிக்கை எடுப்பதாக உறுதி தந்தார்கள்.