போகும் இடத்தில் எல்லாம் விரட்டப்படும் வீரமணி: நீலகிரியிலும் அனுமதி மறுப்பு
ஊட்டி: திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பிரச்சாரம் செய்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என கூறி, அவருடைய பிரச்சாரத்திற்கு நீலகிரி மாவட்ட காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
நீலகிரி மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளராக ஆ.ராசா போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து நேற்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, குன்னூர் மற்றும் கூடலூர் பகுதியில் பிரச்சாரம் செய்வதாக இருந்தது.
இதற்காக திராவிடர் கழகத்தினர் நேற்று குன்னூர் டிஎஸ்பி பிரசாத்திடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்தனர். ஆனால் அதற்கு முன்பே இந்து முன்னணியின் நீலகிரி மாவட்ட தலைவர் மஞ்சுநாத், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம், கடந்த மாதம் 22ம் தேதி சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணரை பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தோடு தொடர்புப்படுத்தி கி.வீரமணி பேசியுள்ளதாக புகார் அளித்தார்.
EXCLUSIVE: 20 வருடமாக.. பரமக்குடி சண்முகவள்ளி கடையில் மட்டும் கூட்டம் கட்டி ஏறுவது ஏன்?
மேலும் மஞ்சுநாத் தனது புகாரில், வீரமணியை நீலகிரியில் பிரச்சாரம் செய்ய அனுமதித்தால், அமைதி சீர்குலையும் என்றும் எனவே அவரை இங்கு பிரச்சாரம் செய்ய அனுமதிக்கக்கூடாது எனறும் கோரியிருந்தார்.
இதனால் குன்னூர் மற்றும் கூடலூரில் வீரமணி பிரச்சாரம் செய்ய நீலகிரி காவல்துறை நேற்று அனுமதி வழங்கவில்லை. இதன்காரணமாக அவரது பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது. முன்னதாக திருப்பூரிலும், திருச்சியிலும் வீரமணிக்கு எதிராக இந்து முன்னணியினர் போராட்டம் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது.