கண்ணும் கருத்துமாக "லெமன் அன்ட் ஸ்பூன்" விளையாடி அசத்திய கலெக்டர் திவ்யா
ஊட்டியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மாவட்ட கலெக்டர் கலந்து கொண்டார்.
ஊட்டி: சுற்றி இத்தனை பேர் இருக்கிறார்களே என்று பார்க்காமல், லெமன் அண்ட் ஸ்பூன் விளையாட்டிலேயே ஆர்வமாக இருந்தார் நீலகிரி கலெக்டர்.
நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அடிப்படையில் கிறிஸ்தவர் என்றாலும், நேற்று நடைபெற்ற பொங்கல் பண்டிகை விழாவில் ஆர்வமாக கலந்து கொண்டார்.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா துறை சார்பாக பொங்கல் விழா நடைபெற்றது. ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் பொங்கலின் சிறப்பை அறிந்து கொள்ளும் வகையில் இந்த விழா வருடா வருடம் நடத்தப்படுவது வழக்கம்.
புதுபானையில் பொங்கல்
அதன்படி இந்த ஆண்டுக்கான பொங்கல் விழாவினை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார். இதில் படுகர்கள், தோடர்கள், உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பூங்காவிலேயே செங்கற்களால் தயாரான அடுப்பில் புது பானை வைக்கப்பட்டு பொங்கலிட்டனர்.
கோணிப்பை விளையாட்டு
பின்னர் கோத்தர் மற்றும் படுகரின மக்களின் பாரம்பரியம் நடனம் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும் வழங்கப்பட்டது. இதையடுத்து, ஸ்பூன்லிங் விளையாட்டு, சாக் ரேஸ் எனப்படும் கோணிப்பை விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.
கைதட்டி ஆரவாரம்
இதில் ஏராளமானோர் ஆர்வத்துடன் பங்கெடுத்தனர். அப்போது மக்களோடு மக்களாய் திடீரென்று வாயில் ஸ்பூனில் லெமன் வைத்து கொண்டு கலெக்டர் விளையாட ஆரம்பித்துவிட்டார். இதை பார்த்ததும் சுற்றியிருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
வெளிநாட்டினர்
முக்கியமாக பொங்கல் பானையை செங்கல்மேல் வைத்தது முதல், சாக்கு பை விளையாட்டு வரை கண் இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தது வெளிநாட்டுக்காரர்கள்தான்!! சர்க்கரை பொங்கலை தந்ததும், அதனை பெற்றுக் கொண்ட வெளிநாட்டினர் மாவட்ட மக்களுக்கு பொங்கல் வாழ்த்தினை சொன்னார்கள்.