தினமும் 15 கி.மீ.. 30 ஆண்டுகளாக பயணம்.. வன விலங்குகளுக்கு மத்தியில் சாகசம் செய்த தபால்காரர் சிவன்
நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த 30 ஆண்டுகளாக அடர்ந்த காட்டில் பயணம் செய்து கடிதங்கள் வழங்கி வந்த தபால்காரர் டி சிவன் கடந்த வாரம் தனது பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.
Recommended Video
நீலகிரி மாவட்டம் குன்னூர் வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சிவன். கடந்த 30 ஆண்டுகளாக தபால் துறையில் பணியாற்றி வந்தார். இவர் தற்போது ஓய்வு பெற்றுள்ளார்.
அரசு ஊழியர்கள் பணியமர்த்தப்படுவதும் குறிப்பிட்ட வயதில் ஓய்வு பெறுவதும் சகஜம்தானே என நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனால் இவர் தனது வாழ்வில் பலவித சவால்களை சுமந்து கொண்டு கடிதங்களை வழங்கியுள்ளார்.
"சேட்டா சேட்டா".. பஸ்ஸுக்கு பின்னாடியே ஓடிவந்த 35 வயசு பெண்.. டக்கென நிறுத்திய டிரைவர்.. அருமை அருமை
அடர்ந்த காடு
அதாவது தினமும் 15 கி.மீ. அடர்ந்த காட்டிலும் பயணம் செய்து மக்களுக்கு தபால்களை கொடுத்து வந்தார். இவர் செல்லும் வழி அடர்ந்த காடு என்பதால் அவ்வழியே காட்டு யானைகள், கரடிகள், வழுக்கும் நீரோடைகள், நீர்வீழ்ச்சிகள் ஆகியன உள்ளன. அவற்றை கடந்து நாள்தோறும் பணிக்கு வருவதை அவர் வாடிக்கையாக கொண்டிருந்தார்.
குவியும் பாராட்டு
இவரை பற்றிய பதிவுகளை ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாஹூ தனது ட்விட்டரில் வெளியிட்டவுடன் அதற்கு ஏராளமானோர் கருத்துகளை பதிவிட்டுள்ளனர். ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார், தேசத்திற்காக அவரது அர்ப்பணிப்பு மிகவும் பாராட்டுதலுக்குரியது. வாழ்த்துகள் என்றார்.
ஹீரோ
இன்னும் சிலர் இவர்தான் உண்மையான ஹீரோ என்று கூறியுள்ளார்கள். மேலும் சிலர் பள்ளி பாடப்பிரிவு மாற்றம் செய்யப்பட்டால் இவரது வரலாற்றை அதில் சேர்க்க வேண்டும் என கூறியுள்ளார்கள். அது போல் அவர் பணியாற்றிய தபால் நிலையத்திற்கு D Sivan India Post Office என பெயர்மாற்ற வேண்டும் என்கிறார்கள்.
மழை, வெள்ளம்
இந்த காலத்தில் கிராமத்தில் பணியாற்ற மாட்டேன், ரொம்ப தூரத்தில் பணியாற்ற மாட்டேன், இந்த துறை வேண்டாம், அந்த துறை வேண்டாம், இந்த இடம் வேண்டாம், அந்த இடம் வேண்டாம் என சொல்லும் அரசு ஊழியர்களுக்கு மத்தியில் 30 ஆண்டுகளாக இத்தனை சாகச பயணத்தை மேற்கொண்டு மலையில் வாழும் மக்களை மதித்து அவர்களுக்கு தனது சேவையை செய்தது அளப்பரியது. அதிலும் நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்தால் சாதாரண சாலைகளிலேயே குண்டு எது குழி எது என தெரியாது. இதில் காட்டு பயணம் என்றால் அம்மாடி சொல்லவே வேண்டாம். ஹாட்ஸ் ஆப் டூ சிவன்.
காட்டு விலங்கு
இதுகுறித்து தபால்காரர் சிவன் கூறுகையில் கீழ்சிங்காரா என்ற பகுதி அடர்ந்த காடு. அந்த வழியில்தான் போக வேண்டும். அந்த வழியில் போகும் போது என்னை காட்டு யானைகள் விரட்டின. அதிலிருந்து தப்ப நான் ஓடியிருக்கிறேன். எனினும் அந்த மக்களுக்கு போய் சேர வேண்டிய தபாலை நான் கொடுத்திருக்கிறேன். எல்லா காட்டு விலங்குகளையும் நான் பார்த்துள்ளேன்.
பொறுப்பு
வடகலைதோட்டம், மேல்குறும்பாடி உள்ளிட்ட ஆதிவாசிகள் வசிக்கும் கிராமங்களில் போய் தபாலை கொடுத்துவிட்டு அங்கிருந்து பஸ் மூலம் குன்னூருக்கு வந்துவிடுவேன். காலையில் 10 மணிக்கு தொடங்கினால் ஆதிவாசி கிராமங்களில் கடிதம் கொடுக்க 2 மணி ஆகும். எனது கடமையை நான் செய்தேன். நமக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை நாம் சரியாக செய்ய வேண்டும் என்றார். இவருக்கு பூபதி என்ற மனைவி, ஒரு மகள், ஒரு மகன் ஆகியோர் உள்ளனர்.