ராத்திரி நேரத்தில் குன்னூரில் கூல் வாக்கிங் போகும் கரடி.. திகிலில் மக்கள்!
குன்னூரில் இரவில் கரடி நடமாடி வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்
Recommended Video
ஊட்டி: ராத்திரி நேரங்களில் கூலாக நடமாடி வரும் கரடியை நினைத்துதான் குன்னூர் மக்கள் பயத்தில் உறைந்திருக்கிறார்கள்
ஏற்கனவே நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. தேயிலை தோட்டப்பகுதிகளுக்குள் மட்டும் புகுந்து அட்டகாசம் செய்து வந்த கரடிகள் தற்போதும் ஊருக்குள்ளும் புகுந்து வருகிறது.
எண்ணெய் குடித்துவிடும்
அப்படி ஊருக்குள் புகுந்து கரடிகள் பூட்டியிருந்த கடைகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தி விடுகிறது. மேலும் கோயில்கள் எங்காவது தெரிந்தால் அந்த கோயிலுக்குள்ளும் நுழைந்துவிடுகிறது. கோயிலினுள் ஏற்றி வைத்திருக்கும் விளக்குகளையும் கீழே தள்ளி விடுவதுடன், அந்த விளக்குகளில் உள்ள எண்ணெய்களையும் முழுசும் குடித்துவிட்டு பிறகுதான் நடையை கட்டுகிறது.
கூல் கரடி
இதையெல்லாம் பார்த்து ஏற்கனவே பீதியில் மக்கள் இருக்கிறார்கள். இந்தநிலையில் குன்னூரில் கரடி நடமாட்டம் அதிகமாக தென்பட்டு வருகிறது. குறிப்பாக குன்னூர் அருகேயுள்ள சேலாஸில் கரடி நடமாடி கொண்டிருந்தது. இந்த சேலாஸ் என்பது ஒரு பஜார் வீதி. இந்த பஜாரில் ராத்திரி 10.30 மணிக்கு கரடி ஒன்று கூலாக நடந்து போய் கொண்டிருப்பதை பார்த்ததும் அந்த பக்கமாக வாகனங்களில் வந்தவர்கள் எல்லோரும் ஷாக் ஆகி நின்றுவிட்டார்கள்.
ஆடி அசைந்து போனது
அந்த கரடி எந்த பக்கம் போகிறதென்றே தெரியவில்லை. திடீரென்று நேராக போகிறது, பிறகு குறுக்கால போகிறது என்பதால் நிமிஷத்துக்கு நிமிஷம் வாகன ஓட்டிகளுக்கு பல்ஸ் எகிறி கொண்டு போனது. ஆனால் நம்ம மக்கள் எவ்வளவு பீதி இருந்தாலும் அதை ஒரு பக்கம் ஓரமா வெச்சிட்டு செல்போனில் கரடி நடமாட்டத்தை படம்பிடித்தார்கள். கடைசியாக ஆடி அசைந்து கரடி போய்விட்டது உறுதியாக அறிந்த பின்னரே வாகன ஓட்டிகள் அங்கிருந்து நகர்ந்தார்கள்.
நடுங்கும் மக்கள்
ஆனால் தற்போதுவரை சாலையை கடக்கும்போதெல்லாம் அச்சத்துடன்தான் கடந்து வருகிறார்கள். மக்களை யாரையும் தாக்கி விடுவதற்கு முன்னாலேயே அந்த கரடியை கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை பலமாக எழுந்துள்ளது. மீண்டும் அந்த ஒத்தை கரடி எப்ப வருமோ என்று குளிரையும் தாண்டி குன்னூர் மக்கள் நடுங்கி கொண்டிருக்கிறார்கள்.