ஆ.ராசா நீலகிரி திமுக வேட்பாளர்: புகுந்த வீட்டில் மீண்டும் தன் செல்வாக்கை நிரூபிப்பாரா?
நீலகிரி திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார் ஆ.ராசா.
நீலகிரி: நீலகிரி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளராக களமிறங்குகிறார் முன்னாள் மத்திய அமைச்சரான ஆ.ராசா.
பெரம்பலூரைச் சேர்ந்தவர் ஆ.ராசா (55). வழக்கறிஞரான இவர் கடந்த 1996, 99 மற்றும் 2004ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் பெரம்பலூர் தனி தொகுதியில் வெற்றி பெற்று எம்.பியாக பதவி வகித்தார்.
2009ம் ஆண்டு நீலகிரி தொகுதியில் போட்டியிட்டு ஜெயித்த ராசா, மீண்டும் 2014ல் அதே தொகுதியில் களமிறங்கினார். ஆனால் அப்போது அவரால் அங்கு வெற்றி பெற இயலவில்லை. இந்நிலையில், தற்போது மீண்டும் அதே தொகுதியில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
திமுக கொள்கைப் பரப்பு செயலாளரான ராசா, மத்திய இணை அமைச்சர் மற்றும் கேபினட் அமைச்சராக பதவி வகித்தவர்.
அதிகபட்சமாக தேசிய கட்சியான காங்கிரஸ் நீலகிரி மக்களவைத் தேர்தலில் 7 முறை வெற்றிப் பெற்றுள்ளது. பா.ஜ.க, தி.மு.க மற்றும் அ.தி.மு.க தலா 2 முறைகள் இந்தத் தொகுதியை கைப்பற்றியுள்ளனர்.
திமுக சார்பில் நீலகிரி தொகுதியில் 3-வது முறையாகவும், மக்களவைத் தேர்தலில் 7-வது முறையாக ஆ.ராசா போட்டியிடுகிறார். பெரம்பலூர் எனக்குப் பிறந்த வீடு நீலகிரி எனக்கு புகுந்த வீடு என தன் பிரச்சாரத்தில் ராசா கூறியுள்ளார். புகுந்த வீட்டில் தன் செல்வாக்கை ராசா நிரூபிப்பாரா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.