சயான், மனோஜ் ஜாமீன் அதிரடி ரத்து.. ஊட்டி கோர்ட் உத்தரவு
Recommended Video
ஊட்டி: கொடநாடு கொலை வழக்கில் மனோஜ், சயான் ஆகியோரின் ஜாமீனை ரத்து செய்து ஊட்டி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் 2017-ம் ஆண்டு நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்த காவலாளியை கொலை செய்து விட்டு விலை உயர்ந்த பொருட்களையும் கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சயான், மனோஜ் உள்ளிட்டவர்களை கைது செய்தனர். இதில், சயான் மற்றும் மனோஜ் ஆகியோர் ஜாமீனில் வெளியே உள்ளனர்.
ஊட்டி கோர்ட்
ஆனால் இவர்கள் 2 பேரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து ஆதாரமற்ற புகார்களை கூறி வருவதால் இவர்களின் ஜாமீனை ரத்து செய்ய கோரி ஊட்டி மாவட்ட நீதிமன்றத்தில் அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஆஜரானார்கள்
இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி வடமலை சயான், மனோஜ் இருவரையும் கடந்த 29-ம் தேதி கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். அதன்படியே இருவரும் அன்றைய தேதியில் ஆஜரானார்கள்.
10 குற்றவாளிகள்
அப்போது, நடந்து முடிந்த வாதத்திற்கு பிறகு வழக்கை வரும் 8ம் தேதிக்கு அதாவது இன்றைய தேதிக்கு நீதிபதி வடமலை ஒத்தி வைப்பதாக அறிவித்தார். மேலும் கோடநாடு கொலை வழக்கு குற்றவாளிகள் 10 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார்.
4 பேர் வரவில்லை
இந்நிலையில் மனோஜ், சயான் இருவருடனும் 10 குற்றவாளிகளும் இன்று கோர்ட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளதால், காலையிலேயே வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆனால் 10 குற்றவாளிகளில் ஜம்சீர் அலி, உதயக்குமார், சந்தோஷ்சாமி, மனோஜ், ஜித்தின் ஜாய், சதீசன் என்கிற 6 பேர்தான் கோர்ட்டுக்கு வந்திருந்தனர்.
ஜாமீன் ரத்து
சயான், மனோஜ் இருவருமே ஆஜராகவில்லை. இதையடுத்து, இருவரின் ஜாமீனை ரத்து செய்து செய்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கின் விசாரணை வருகிற 18ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைக்கு இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்கள் அன்று வந்தால் இருவரும் கைது செய்யப்படக் கூடும் என்று தெரிகிறது.