ஊட்டி கோர்ட்டில் சயான், மனோஜ் நேரில் ஆஜர்.. ஜாமீன் தொடர்பான வழக்கு 2-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
ஊட்டி: கொடநாடு மர்ம கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சயான், மனோஜூக்கு அளிக்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரிய வழக்கில் இருவரும் இன்று ஊட்டி நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் 2017-ம் ஆண்டு நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்த காவலாளியை கொலை செய்து விட்டு விலை உயர்ந்த பொருட்களையும் கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சயான், மனோஜ் உள்ளிட்டவர்களை கைது செய்தனர். இதில், சயான் மற்றும் மனோஜ் ஆகியோர் ஜாமீனில் வெளியே உள்ளனர். இந்த ஜாமீன் வரும் 2-ம் தேதி வரை இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேத்யூ மீதான வழக்கு விசாரணைக்கு ஹைகோர்ட் தடை
நேரில் ஆஜராக உத்தரவு
ஆனால் இவர்கள் 2 பேரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து ஆதாரமற்ற புகார்களை கூறி வருவதால் இவர்களின் ஜாமீனை ரத்து செய்ய கோரி ஊட்டி மாவட்ட நீதிமன்றத்தில் அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி வடமலை, சயான், மனோஜ் இருவரும் வருகிற 29-ந்தேதி அதாவது இன்றைய தினம் சயான், மனோஜ் ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
மேல்முறையீடு
ஆனால் இந்த உத்தரவை எதிர்த்து சயான், மனோஜ் இருவரும் சென்னை ஹைகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த ஹைகோர்ட்டும், விசாரணைக்கு 2 பேரையும் உதகை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டது. இதையடுத்து, மனோஜ், சயான் இருவரும் இன்று ஊட்டி நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகினர்.
பிப்ரவரி 2-ம் தேதி
அப்போது சயான், மனோஜ் மீதான ஜாமீனை ரத்து செய்யக்கோரும் போலீஸ் மனு மீதான விசாரணையை வரும் 2-ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக நீதிபதி அறிவித்தார்.
பலத்த பாதுகாப்பு
மேலும் இறுதி வாதத்தை வரும் 2-ம் தேதி எடுத்து வைக்க வேண்டும்' என்றும் சயான், மனோஜ் தரப்பில் ஆஜரான வக்கீல் செந்திலிடம் நீதிபதி தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் சயான், மனோஜ் ஆகியோர் காரில் அழைத்து செல்லப்பட்டனர்.