நீலகிரியில் பொத்துக் கொண்டு ஊற்றிய வானம்.. இந்திய அளவில் புதிய சாதனை.. அவலாஞ்சியில் 58 செ.மீ மழை
ஊட்டி: இந்த ஆண்டு இந்திய அளவிலேயே அதிகமாக, நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் அதிகபட்சமாக 58 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்கிறது. நீலகிரி மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான், நேற்றும் அங்கு கன மழை பெய்துள்ளது.
அதிலும் அவலாஞ்சி பகுதியில் வானம் பொத்துக்கிட்டு ஊற்றும் என்பார்களே அப்படி மழை பெய்துள்ளது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் விடாமல் மழை.. கர்நாடக அணைகளிலிருந்து தமிழகத்திற்கு நீர்வரத்து உயரும்
அவிலாஞ்சி சாதனை
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இன்று காலை வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவடடம், அவலாஞ்சியில் அதிகபட்சமாக 58 செ.மீ மழை பெய்துள்ளது. இந்த ஆண்டு இந்திய அளவிலேயே ஒரே நாளில் பதிவான அதிகப்படியான, மழைப் பதிவு இதுதான். அவலாஞ்சி என்பது, நீர் பிடிப்பு பகுதியாகும். குடியிருப்பு பகுதி கிடையாது. எனவே, நேரடியாக மக்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால் கடும் குளிர் வாட்டுகிறது.
மழை அளவு
அதேநேரம், கூடலூரில் 33 செ.மீ மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது. மேல் பவானி 32 செ.மீ., நடுவட்டம் 23 செ.மீ, கிலேன்மோர்கன் 21 செ.மீ, சின்னகல்லார் 11 செ.மீ என்ற அளவில் மழை பதிவு உள்ளது. மேலும் இந்த மழை தொடரும் என்ற எச்சரிக்கையால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் முடங்கியுள்ளனர்.
பவானி சாகர்
கடும் மழை காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டியுள்ளது. கடந்த 3 நாட்களில் சுமார் ஆறு அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதையடுத்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் கரையோரம் இருக்கக்கூடிய மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இயல்பு நிலை
நீலகிரி மாவட்டத்தில், மேகமூட்டத்துடன் கனமழை பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் வாகனங்கள் முகப்பு விளக்குகளை இட்டபடி செல்கிறார்கள். நீலகிரி மாவட்டத்தில் கடுங்குளிருடன் நீண்ட நேரத்திற்கு மேலாக கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிப்படைந்துள்ளது.