அதிக மழை, கடும் வறட்சி.. ஊட்டிக்கு எது வேண்டுமானாலும் ஆகலாம்.. எச்சரிக்கும் நிபுணர்கள்
நீலகிரி: ஊட்டியில் கடந்த 28 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 0.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்து காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வெப்பநிலை மாற்றத்தால் அதிக அளவு மழை அல்லது கடும் வறட்சி ஏற்படும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ஊட்டி அருகேயுள்ள தீட்டுக்கல் பகுதியில் இந்திய மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு ஆராய்ச்சி மையம் அமைந்துள்ளது.
இந்த ஆய்வு மையத்தை சேர்ந்த மூத்த விஞ்ஞானி ஒருவர் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். கடந்த 30 ஆண்டுகளில் நீலகிரியில் ஏற்பட்டுள்ள கால மாற்றத்தை ஆய்வு செய்த போது, சராசரி அதிகபட்ச வெப்பநிலை 0.6 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது தெரிய வந்ததுள்ளது.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இந்திய மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு ஆராய்ச்சி மையம் கடந்த 1954-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது என கூறினார். இந்த மையத்தில் கடந்த 1960-ம் ஆண்டு முதல், ஊட்டியின் வெப்பநிலை குறித்த தகவல்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
1960 முதல் 1990 வரை, பின்னர் 1991 முதல் 2018 வரை என இரு பிரிவாக பிரிக்கப்பட்டு, வெப்பநிலை மாற்றம் குறித்து தீவிரமாக ஆய்வு நடத்தினோம்.
இதில் 1960 - 1990 வரையிலான காலக்கட்டத்தில் பதிவான வெப்பநிலையை விட, கடந்த 28 ஆண்டுகளில் அதாவது 1991 - 2018 வரையிலான காலகட்டத்தில் சராசரி அதிகபட்ச வெப்பநிலை 0.6 டிகிரி செல்சியஸ் அதிகரித்து காணப்பட்டுள்ளது. மேலும் சராசரி குறைந்தபட்ச வெப்பநிலை 0.33 டிகிரி செல்சியஸாக அதிகரித்துள்ளது.
கடந்த 1960 - 1990 வரையிலான ஆண்டுகளில் 20 டிகிரி செல்சியஸிற்கும் மேலான வெப்பநிலை இரு ஆண்டுகள் நிலவியுள்ளது. ஆனால் 1991 - 2018 வரையிலான ஆண்டுகளில், சுமார் 15 ஆண்டுகள் 20 டிகிரி செல்சியஸிற்கும் மேல் வெப்பநிலை பதிவாகியுள்ள அதிர்ச்சி தகவலை தெரிவித்தார் அந்த நிபுணர்.
மேலும் பேசிய அந்த விஞ்ஞானி ஆய்வு முடிவுகளின் மூலம் கடந்த 1990-ம் ஆண்டிற்கு பிறகு ஊட்டியின் வெப்பநிலையானது, தொடர்ந்து அதிகரித்தபடியே தான் இருந்து வருகிறது என்பது தெரிய வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
இதே நிலை இன்னும் சில ஆண்டுகளுக்கு நீடிக்குமானால், மிக அதிகமான மழை அல்லது அதிகமான வறட்சி என இவற்றில் எதையாவது ஒன்றை ஊட்டி சந்திக்க நேரிடும் என எச்சரித்தார்.