பனிப்பொழிவு குறையவே இல்லை.. குளிருது.. குளிருது.. ஊரே குளிருது.. நடுங்குகிறாள் மலைகளின் அரசி!
நீலகிரியில் உறைபனியின் தாக்கம் நீடிக்கும் என சொல்லப்படுகிறது.
ஊட்டி: குளிருது.. குளிருது.. ஊரே குளிருது என நடுங்கி கிடக்கிறாள் மலைகளின் அரசி! இன்னும் கொஞ்சம்கூட பனிப்பொழிவு குறையவே இல்லை. இப்போதைக்கு குறையவும் குறையாதாம்.
நீலகிரியில் எப்பவுமே அக்டோபர் மாதம் துவக்கத்திலேயே நீர்பனி விழ ஆரம்பித்துவிடும். இப்படியே ஒரு மாசத்துக்கு இருக்கும்.
அதன்பிறகு நவம்பர் மாத துவக்கத்தில் உறைப்பனி விழ ஆரம்பித்துவிடும். இது கிட்டத்தட்ட பிப்ரவரி மாசம் வரை நீடிக்கும்.
காலை முதல் இரவு வரை
ஆனால், எந்த வருஷமும் இல்லாமல் இந்த வருஷம் அதிக அளவு உறைபனி நீலகிரியில் காணப்படுகிறது. காலையில் இருந்து இரவு வரை பனி உறைபனி கொட்டி கொண்டே இருக்கிறது.
மக்கள் அவதி
2 மாதமாக பசும்புல்வெளிகள் எல்லாம் வெள்ளை போர்வையை இழுத்து போர்த்து கொண்டு சாவகாசமாக படுத்துவிட்டதைபோல பனிக்கட்டி தெரிகிறது. உள்ளூர் மக்கள் கூட வெளியில் தலைகாட்டுவதில்லை. பெரும்பாலானோர் ரொம்பவும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
கருகும் பயிர்
கருகிவிட்ட பயிர்களால் விவசாயிகளின் நிலைமையோ பரிதாபத்துக்கு உரியதாகி விட்டது. அக்னி நட்சத்திரம் நடக்கும்போது சென்னை ரோடுகள் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது ஊட்டி ரோடுகளும். சுற்றுலா தளங்களும் வெறிச்தான்!
குளிர் போகாது
தமிழகத்தின் மற்ற பகுதிகளில் குளிர் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்து கொண்டிருப்பது ஆறுதலாக இருந்தாலும் நீலகிரியில் இப்போதைக்கு குளிர் போகாது என நீர்வள ஆராய்ச்சி மையம் சார்பில் கூறப்படுகிறது.
நீடிக்கும்
அடுத்த மாதம் வரை உறை பனியின் தாக்கம் இருக்கும் என்றும், அதன்பிறகுதான் பனி குறையவே ஆரம்பிக்கும் என்றும் சொல்லப்படுகிறது. அப்படியானால் மார்ச் மாதம்தான் ஓரளவு இயல்பு நிலை வரும். இருக்கும் குளிர் நடுக்கம் பத்தாது என்று மைனஸ் 4, மைனஸ் 5 டிகிரிகள் என காட்டி மாவட்ட மக்களை இன்னமும் நடுநடுங்க வைத்து வருகிறது!!