விங் கமாண்டர் அபிநந்தன் பெயரை விஜய் ஆனந்த் என மாற்றி கூறிய தமிழக அமைச்சர்
நீலகிரி: விங் கமாண்டர் அபிநந்தன் பெயரை விஜய் ஆனந்த் என தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பண்ணன் கூறியதால் சலசலப்பு ஏற்பட்டது.
தமிழக மக்களவை தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலுக்கு இன்னும் 15 நாட்களே உள்ளது. இந்த நிலையில் வேட்பாளர்களை ஆதரித்து தத்தமது கட்சிகள் பிரசாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நீலகிரி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட பவானிசாகர் சட்டசபை தொகுதியில் அரசூர், உடையார்பாளையம், உக்கரம் ஆகிய இடங்களில் அதிமுக வேட்பாளர் தியாகராஜனை ஆதரித்து தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பண்ணன் பிரசாரம் செய்தார்.
பாஜக அரசு
அப்போது எருமைகாரன்பாளையத்தில் வீடுவீடாக சென்று வாக்கு சேகரித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில் மத்திய பாஜக அரசு மக்களவை தேர்தலில் அதிமுகவோடு கூட்டணி வைக்க விரும்பின. மேலும் அதிமுக கொடுக்கும் சீட்கள் தங்களுக்கு போதும் என்றனர்.
சீனா
இதேபோல் பாமக, தேமுதிக, தமாகா ஆகிய கட்சிகளும் கூட்டணியில் சேர விரும்பி இணைந்தன. மத்தியில் மோடி அரசு சிறப்பாக செயல்படுகிறது. பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் நமக்கு இடையூறாக உள்ளன.
பாகிஸ்தான் முகாம் அழிப்பு
புல்வாமா தாக்குதலுக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக 15 நிமிடத்தில் பாகிஸ்தானிலுள்ள முகாமை இந்திய விமான படை அழித்தது. அதற்கு உறுதுணையாக இருந்த பைலட் விஜய் ஆனந்துக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.
தவறை திருத்திக் கொண்ட அமைச்சர்
உடனே அருகில் இருந்தவர்கள் அவர் விஜய் ஆனந்த் அல்ல அபிநந்தன் என்றவுடன் தனது தவறை திருத்தி கொண்டார். இதனால் சலசலப்பு ஏற்பட்டது.