அந்த பக்கம் கேரளா.. இந்த பக்கம் கர்நாடகா.. நீலகிரியை இழுத்து மூடிய கலெக்டர்.. கொரோனா படுத்தும் பாடு!
சுற்றுலா பயணிகள் வர நீலகிரியில் தடை விதிக்கப்பட்டுள்ளது
ஊட்டி: "எல்லா கடைகளுக்கு முன்னாடியும் சோப்பு தண்ணியை உடனே வைங்க.. 320 கிராம் பிளீச்சிங் பவுடருடன் ஒரு லிட்டர் தண்ணீரை கலந்தால், மேல் பகுதியில் நுரை கலந்த தண்ணீர் காணப்படும்... அதை 9 லிட்டர் தண்ணீருடன் சேர்த்து.. வீடுகள், சுற்றுப்புறங்களில் தெளித்து விடுங்கள்.. யாராவது கொரோனா பீதியை கிளப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
Recommended Video
நீலகிரியை பொறுத்தவரை இது ஒரு சுற்றுலாதலம்.. வெளியூர், வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் வந்து செல்வர்.. சீசன் என்றில்லாமல் பொதுவாகவே சுற்றுலா பயணிகள் நிரம்பி வழியும் மாவட்டம் இது.. இப்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நீலகிரியில் அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டுள்ளன.
மாவட்டத்தை பொறுத்தவரை ஒரு எல்லையில் கேரளா, இன்னொரு பக்கம் கர்நாடகா உள்ளதால், அந்த மாநில மக்களும் வெகு இயல்பாகவே தினமும் வந்து செல்வர்.. குறிப்பாக கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதால், சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வருவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.. எல்லா செக் போஸ்ட்களிலும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
சுற்றுலாதலம்
இப்போதைக்கு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, சிம்ஸ் பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா, கோத்தகிரி நேரு பூங்கா, தொட்டபெட்டா மலைசிகரம், பைக்காரா படகு இல்லம் உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்கள் வருகின்ற 31ம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.. ஏற்கனவே சுற்றுலா பயணிகளை ஊட்டிக்கு வர வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தனர்.. அதேபோல ஊட்டி ரயிலும் வருகிற 31-ம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
விழிப்புணர்வு
இந்நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் ஊட்டியில் கலெக்டர் ஆபீசில் நேற்று நடந்தது.. கலெக்டர் இன்னசென்ட் திவ்யா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் அதிகாரிகளுடன் ஆலோசித்தார். அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் இவ்விஷயத்தில் கலெக்டர் விழிப்புணர்வுடன் செயல்பட்டு வருகிறார்.
கை கழுவ வேண்டும்
இதை பற்றி அவர் சொல்லும்போது, "முழு கட்டுப்பாட்டில் நீலகிரி உள்ளது.. கிருமிநாசினியை மக்களே தயார்படுத்தி கொள்ளலாம்.. 320 கிராம் பிளீச்சிங் பவுடருடன் ஒரு லிட்டர் தண்ணீரை சேர்த்தால், மேல் பகுதியில் நுரை கலந்த தண்ணீர் காணப்படும்.. அதை 9 லிட்டர் தண்ணீருடன் சேர்த்து வீடுகள், சுற்றுப்புறங்களில் தெளிக்கலாம்.... கிருமிநாசினி கிடைக்காத பட்சத்தில், அதற்கு பதிலாக அறுவை சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் ஸ்பிரிட்-ஐ கிருமி நாசினியாக கூட பயன்படுத்தலாம். சோப்பை பயன்படுத்தி 20 முதல் 30 வினாடிகள் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும்.
நோட்டீஸ்
மாவட்டங்களில் உள்ள மார்க்கெட்டுகளில் உள்ள கடை உரிமையாளர்கள் தங்களது கடையினை சுற்றி, கிருமி நாசினியை கொண்டு, நாளொன்றுக்கு 5 முறையாவது சுத்தம் செய்ய வேண்டும்... கடைக்கு முன்பாக கைகளை கழுவுவதற்கு சோப்பு தண்ணீர் வைக்க வேண்டும்.. காட்டேஜ்கள், ஹோட்டல்கள் எல்லாமே மூடப்பட்டு உள்ளன.. விடுதிகளில் உள்ள சுற்றுலாபயணிகள் உடனடியாக காலி செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது. வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் தங்கி இருந்தால், அவர்கள்யும் காலி செய்ய வேண்டும் என்று சொல்லி சம்பந்தப்பட்ட வெளிநாட்டு தூதரகத்துக்கு தெரிவிக்கும்படி சொல்லவேண்டும். இந்த உத்தரவை யாராவது மீறினால் அந்த காட்டேஜ், ஹோட்டல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு சீல் வைக்கப்படும்.
கண்காணிப்பு
நீலகிரியை பொறுத்தவரை சர்வதேச பள்ளிகள் இங்கு நிறைய உள்ளன... அதனால் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் படிப்பதால், பள்ளிகளை மாவட்ட மருத்துவ அதிகாரிகள் நேரடியாகவே கண்காணிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது... கல்யாணம் என்றால்கூடமண்டபத்துக்கு 100-க்கும் குறைவானவர்களை மட்டுமே அழைக்க வேண்டும்.. கிராமங்களில் சுகாதாரத்தை பாதுகாக்க 40 குழுக்கள் அமைக்கப்பட்டு, அனைத்து பகுதிகளிலும் தூய்மை பணி கண்காணிக்கப்படுகிறது... இப்போதைக்கு இங்கு எந்த சுற்றுலா பயணிகளும் இல்லை.. ஆனால் கொரோனா பாதிப்பு குறித்த வதந்தியை யாராவது பரப்பினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும்.
மெடிக்கல் டீம்
இங்கு தங்கி இருப்பவர்களையும் சொந்த ஊருக்கு திரும்பிச் செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளோம்... கர்நாடகா, கேரள மாநில எல்லை பகுதிகளில் 7 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு அங்கு மெடிக்கல் டீம் இயங்கி வருகின்றன... கேரளா, கர்நாடகாவில் இருந்து வரும் வாகனங்களை அவர்கள் கண்காணித்து வருகின்றன" என்றார் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா.
வியாபாரிகள்
இதையடுத்து நீலகிரியே நாலாபுறமும் இழுத்து மூடப்பட்டுள்ளது.. ஆங்காங்கே ஒருசிலர் பேரின் நடமாட்டம் உள்ளது.. அவர்களும் முகத்தில் மாஸ்க் அணிந்தபடி உள்ளனர்... ஊட்டியில் வியாபாரம் சூடுபிடிக்கும் நேரம் இது.. ஆனால் மொத்த வியாபாரிகளும் பாதிப்படைந்துள்ளனர்... சுற்றுலா தளங்கள் வெறிச்சோடி இருந்தாலும், அங்கு வேலை பார்க்கும் தோட்டக்கலைத்துறை பணியாளர்களும் மாஸ்க் அணிந்தபடிதான் பணிகளை கவனிக்கின்றனர்.
குளிர்பிரதேசம்
மேலும் பஸ் ஸ்டேண்ட், ரயில்வே ஸ்டேஷன் சுற்றுலா தலங்களுக்கு அடிக்கடி நேரடியாகவே சென்று கலெக்டர் திவ்யா கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.. கிருமி நாசினி தெளிக்கும் பணியை விரைவுப்படுத்தியும் வருகிறார்... மற்ற நேரங்களில் தூய்மை பணியிலும் நேரடியாகவே ஈடுபடுகிறார்.. இப்போதைக்கு கொரோனா தாக்கம் துளியும் இல்லை என்றாலும், குளிர்பிரதேசம் என்பதாலும், மாநிலங்களின் எல்லையில் உள்ள மாவட்டம் என்பதாலும், வெளிநாட்டு பயணிகள் அடிக்கடி வரும் பகுதி என்பதாலும் ஒருவித கலக்கமும், பீதியும் மொத்த நீலகிரி மாவட்டத்தையும் இறுக்கி பீடித்துள்ளது!