கனமழை எதிரொலி .. உதகை - கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தம்
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் கனமழை எதிரொலியாக உதகை - கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் இரு நாட்களுக்கு முன்பு் பெய்யத்தொடங்கிய மழை, பின்னர் பலத்த மழையாக மாறியது. இரவு முழுவதும் நீடித்த கனமழை, நேற்று முன்தினம் காலை வரை விடிய விடிய கொட்டியது. நீலகிரி மாவட்டத்தின் அப்பர்பவானியில் 308 மி.மீட்டரும், அவலாஞ்சியில் 220 மி.மீட்டரும் மழை பெய்தது. கூடலூரில் ஒரே நாளில் 201 மி.மீட்டர் (20 செ.மீ) மழை பெய்தது.
கூடலூர் பகுதியில் பெய்த கனமழை காரணமாக பாண்டியாறு, மாயார் உள்பட அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.மழை காரணமாக கூடலூர் புரமணவயல் ஆதிவாசி கிராமம் வழியாக செல்லும் ஆற்றுவாய்க்கால் வாய்க்கால் கரை உடைந்து ஆதிவாசி கிராமத்துக்குள் வெள்ளம் புகுந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஆதிவாசி மக்கள் தங்களது குடும்பத்தினருடன் பாதுகாப்பான இடத்துக்கு சென்றனர். ஆனால் ஆற்றின் மறுபக்கம் வசிக்கும் ஆதிவாசி மக்கள் வெளியேற முடியாமல் தவித்தனர்.
இது குறித்த தகவலின் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் லிங்கத்துரை தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து கயிறு கட்டி ஆற்றில் மறுபக்கத்துக்கு சென்று வெள்ளத்தில் சிக்கிய ஆதிவாசி குழந்தைகள், பெண்கள் என மொத்தம் 25 பேரை பாதுகாப்பாக உயிருடன் மீட்டனர். மேலும் அந்த பகுதியை சேர்ந்த 103 ஆதிவாசி மக்கள் அத்திப்பாளி அரசு பள்ளிக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டார்கள்.
இது போல் கூடலூர் புத்தூர்வயல் அருகே உள்ள தேன்வயல் ஆதிவாசி கிராமத்துக்குள் தண்ணீர் புகுந்தது. உடனே ஆதிவாசி மக்கள் வெளியேறி புத்தூர்வயல் அரசு பள்ளிக்கூடத்தில் தங்கினர். அந்த முகாமில் மொத்தம் 175 பேர் தங்க வைக்கப்பட்டனர்.
70 கிமீ வேகத்தில் வீசும் சூறாவளி காற்று.. பேய் மழை.. மும்பை மக்களே வெளியில் போகாதீங்க!
இதற்கிடையே கூடலூரில் இருந்து மைசூரூ, ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதை அறிந்த தீயணைப்பு படையினர் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் விரைந்து வந்து மின்வாள்கள் கொண்டு மரங்களை அறுத்து அகற்றினர். அதன்பின்னர் போக்குவரத்து சீரானது. எனினும் நேற்று பல இடங்களில் மழை பெய்தது. கூடலூர், பந்தலூரில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் தொலைதொடர்பு சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
கனமழை, பலத்த காற்று வீசுவதால் உதகை - கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.நேற்று இரவு 7 மணி முதல் இன்று காலை 6 மணி வரை வாகன போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.