திகில் கிளப்பும் வீடியோ.. விரைந்து சென்ற பைக்.. விரட்டி சென்று பாய்ந்த புலி!
இளைஞர்களை புலி ஒன்று துரத்தி வரும் வீடியோ வைரலாகி வருகிறது
Recommended Video
ஊட்டி: திகில் படம் பார்ப்பது போலவே இருக்கிறது இந்த வீடியோவை பார்த்தால்.. பைக்கில் சென்ற இரு இளைஞர்கள் மீது பாய்வதற்காக புலி ஒன்று விரட்டி துரத்தி வரும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் பந்திப்பூர் என்ற இடம் உள்ளது. இது கேரள - கர்நாடக எல்லையில் உள்ளது. இன்னும் சொல்லப்போனால், இந்த இடம் தமிழ்நாட்டிலும் வருகிறது. அதனால் 3 மாநிலங்களின் எல்லையாகக்கூட கருதப்படுகிறது.
இந்த இடத்தை சுற்றிலும் காட்டுப்பகுதி உள்ளது. அதனால் யானை, கரடி, முள்ளம்பன்றிகள் வருவது சர்வசாதாரணமான விஷயமாகும். இந்த இடத்தில்தான் நேற்று ஒரு பயங்கரமான சம்பவம் நடந்துள்ளது.
2 இளைஞர்கள் பைக்கில் சென்றுள்ளனர். அப்போது, செல்லும்வழியெல்லாம் செல்போனில் வீடியோ எடுத்து கொண்டு போயுள்ளனர். அப்போது, தூரத்தில் மரங்களுக்கு நடுவே புலி ஒன்று வேகமாக இவர்களை நோக்கி வருவதை பார்த்ததும் தூக்கி வாரி போட்டுள்ளது.
புலியை பார்த்ததும் இளைஞர்கள் பைக்கை ரொம்ப வேகமாக ஓட்டியிருக்கிறார்கள். பைக்கின் வேகத்துக்கு புலி அந்த ரோட்டிற்கு வந்துவிட்டது. ஆனால் இவர்கள் பக்கவாட்டில் சென்று கொண்டிருந்ததால், புலியால் ஒரே பாய்ச்சலாக பாய முடியவில்லை. அதனால் சாலைக்கு எதிர்புறம் போய்விட்டது.
இதில் என்ன வேடிக்கை என்றால், இந்த ரணகளத்திலும், உயிரை கையில் பிடித்து கொண்டும், செல்போனில் வீடியோ எடுத்துள்ளார் பைக்கில் வந்த இளைஞர். 2 பேரை புலி துரத்தும் வீடியோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது.