கலெக்டர்ன்னா அது திவ்யாதான்.. நீலகிரியில் வரப்போகிறது "தண்ணீர் ஏடிஎம்"
ஆகஸ்ட் 15 முதல் நீலகிரி மாவட்டத்தில் நடைமுறையில் குடிநீர் ஏடிஎம் வரப்போகிறது
ஊட்டி: கலெக்டர் திவ்யாவின் அடுத்த சூப்பர் முயற்சியாக நீலகிரியில் வரப்போகிறது தண்ணீர் ஏடிஎம்! இப்படி ஒரு புது முயற்சியை கண்டு மாவட்ட மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
நீலகிரியை எடுத்து கொண்டால், பிளாஸ்டிக் என்றாலே மாவட்ட நிர்வாகம் கொதித்தெழுந்துவிடும். அதேபோல, சுற்றுலா பயணிகளையும் பிளாஸ்டிக் கொண்டு வர வேண்டாம் என்று சலிக்காமல் வேண்டுகோள் விடுத்து கொண்டே இருக்கும்.
மாவட்ட மக்களும் இதற்கு ஒத்துழைப்பு தந்தே வருகின்றனர். பிளாஸ்டிக் பொருள்களுக்கு எதிரான ஓர் அறப்போராட்டத்தை தொடங்கியவர் அன்று நீலகிரி கலெக்டராக இருந்த சுப்ரியா சாஹூதான். அடுத்தடுத்து வந்த கலெக்டர்களும் இதனை விடாமல் கடைபிடித்து வருகின்றனர்.
கலெக்டர் திவ்யா
துணிமணிகள், காய்கறி, சிக்கன், மட்டன் என எது வாங்கினாலும், ஒரு பேப்பரில் சுற்றி கொடுப்பதுதான் இங்கு வழக்கம். இதற்கு மாவட்ட மக்களும் நன்றாக ஒத்துழைப்பு தருகின்றனர். அன்று, சுப்ரியா சாஹு தொடங்கி இன்று மாவட்ட கலெக்டர் திவ்யா வரை பிளாஸ்டிக்குக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து வருகிறார்கள். இப்போதும் பிளாஸ்டிக் இல்லா ஒரு மாவட்டத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளார் திவ்யா.
பெரிய பாதிப்பு
தமிழகம் முழுவதும் 14 பொருட்களுக்கு பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டது சமீப காலம் என்றாலும், கடந்த 15 வருஷங்களாக நீலகிரியில் பிளாஸ்டிக்கு தடை இருந்து கொண்டு இருக்கிறது. 14 பொருட்களை தவிர மேலும் சில வகையான பிளாஸ்டிக் பொருள்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் வனப்பகுதிகள் நிறைந்த இந்த மாவட்டத்தில் பிளாஸ்டிக் பெரிய பாதிப்பை தந்துவிடுவதால்தான்.
ஆகஸ்ட் 15
மாவட்ட மக்கள் இதற்கு உதவி புரிந்தாலும் சுற்றுலா பயணிகள் சிலர் ஒத்துழைப்பு தருவதில்லை. இன்னமும் ஒரு லிட்டர்பிளாஸ்டிக் பாட்டில்களில்தான் தண்ணீர் கொண்டு வருகிறார்கள். அதனால் சுதந்திர தினமான வரும் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் ஒரு லிட்டர் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், குளிர்பானங்கள் ஆகியவைகளை விற்பனை செய்ய மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
குடிநீர் ஏடிஎம்
அதற்கு பதிலாகவும், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காகவும் தண்ணீர் ஏடிஎம் அமைக்கப்பட உள்ளது. மாவட்டத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளையொட்டி உள்ள பகுதிகளில் இந்த குடிநீர் ஏடிஎம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஊட்டியில் 10 இடம், குன்னூரில் 4 இடம், கூடலூரில் 6 இடம், சுற்றுலாத் துறை சார்பில் தொட்டபெட்டா, ஊட்டி போட் ஹவுஸ், பைக்காரா, ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, உள்ளிட்ட இடங்களில் மொத்தம் 70 குடிநீர் ஏடிஎம் மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
5 ரூபாய் காயின்
இந்த குடிநீர் ஏடிஎம் மையங்களில் உள்ள மெஷினில் 5 ரூபாய் காயின் போட்டால், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை பெற்றுக் கொள்ளலாம். இதன்மூலம் பிளாஸ்டிக் பாட்டில் முதலில் கொஞ்சமாவது ஒழியும் என்று நம்பப்படுகிறது. மாவட்ட மக்கள் திவ்யாவின் இந்த நவீன திட்டத்துக்கு வழக்கம்போல் ஆதரவு தருவதாக உறுதி அளித்துள்ளனர்.