இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மீது நம்பிக்கையில்லா தீர்மானம்
கொழும்பு: இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்படும் என்று அந்நாட்டிலுள்ள ஜனதா விமுக்தி பெரமுனா கட்சி கூறியுள்ளது.
கடந்த மாதம் ஈஸ்டர் ஞாயிறன்று நடந்த குண்டுவெடிப்பில் 350 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கான மக்கள் படுகாயமடைந்தனர். இலங்கையில் நடந்த இந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து ஏற்கனவே இந்தியா உள்ளிட்ட நாடுகள் எச்சரித்திருந்தும் அந்த எச்சரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்ததால் மிக மோசமான விளைவுகளை இலங்கை சந்தித்தது.
இந்த பயங்கரவாத குண்டுவெடிப்பு சம்பவத்தில் இருந்து நாட்டு மக்களை பாதுகாக்க தவறியதற்காக பொறுப்பேற்று பகிரங்க மன்னிப்பு கோரினார் பிரதமர் ரணில். இது தொடர்பாக சமூக வலை தளத்தில் பதிவிட்டவர், " கொடூர சம்பவத்திலிருந்து மக்களை பாதுகாக்க தவறியதற்காக பொறுப்பேற்று மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நாட்டின் பொருளாதாரம், தேவாலயங்களை மறுசீரமைப்பு செய்ய உறுதி ஏற்கிறேன். சர்வதேச நாடுகளின் உதவியுடன் பயங்கரவாதத்தை ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று பதிவிட்டிருந்தார். பாதுகாப்பு குறைபாட்டால் ஏற்பட்ட இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் குறித்து அந்நாட்டு அதிபர் சிறிசெனாவும் மன்னிப்பு கோரியிருந்தார்.
இந்நிலையில் இலங்கையில்உள்ள ஜனதா விமுக்தி பெரமுனா கட்சி ரணில் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படும் என்று கூறியுள்ளது. இது குறித்து அக்கட்சியின் தலைவர் அனுர குமார திசநாயக்கே நேற்று கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஏப்ரல் 21 அன்று நடைபெற்ற கொழும்புத் தாக்குதலுக்குப் பிறகு ரணில் விக்கிமசிங்கே அரசின் மீது நம்பிக்கையில்லாமல் போய்விட்டது. எனவே சபாநாயகர் கரு ஜெயசூர்யாவிடம் அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை வழங்க உள்ளோம்" என்று கூறியுள்ளார்.
கடந்த வருடமும் ஏப்ரல் மாதம் 4 ம் தேதி ரணில் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இலங்கையில் அப்போது நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ரணில் விக்ரம சிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சி தோல்வியுற்றது. இது ஆளும்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இந்த முடிவுகளால் அதிருப்தியடைந்த அதிபர் மைத்ரிபால சிறிசேனா ரணில் விக்ரமசிங்கேவை பதவி விலகுமாறு கோரினார். ஆனால் சிறிசேனாவின் இந்த கோரிக்கையை ரணில் மறுத்துவிட்டார். இதனால் அதிருப்தி அடைந்த சிறிசேனாவுக்கு கண்டியில் புத்த மதத்தினருக்கும், இஸ்லாமியர்களுக்கும் ஏற்பட்ட மோதல் ரணில் மீது மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
பாஜகவிற்கு மட்டும்தான் குட் நியூஸ்.. மோடிக்கு ரொம்ப பேட் நியூஸ்.. எக்ஸிட் போலோடு எக்ஸிட் ஆகும் நமோ?
இதனால் ரணிலிடம் இருந்த சட்டம்- ஒழுங்குத்துறை அமைச்சர் பதவியை சிறிசேனா பறித்தார். இந்நிலையில் பிரதமர் ரணில் மீது ராஜபக்சேவின் இலங்கை மக்கள் முன்னணி அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தது. நிதி மோசடி செய்ததாகவும், இனக்கலவரத்தை அடக்கத் தவறி விட்டதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மீது ராஜபக்சே கட்சி குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த தீர்மானம் ஏப்ரல் 4 ம் தேதி வாக்கெடுப்புக்கு வந்தபோது 46 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. தீர்மானத்துக்கு ஆதரவாக 76 வாக்குகளும் எதிராக 122 வாக்குகளும் கிடைத்தன. 26 உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில் பிரதமர் ரணில் மீது மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது .